"வரி குறைப்பு வரவேற்க கூடியதுதான்.." பட்ஜெட் குறித்து எம்.பி கார்த்தி சிதம்பரம் கருத்து
எந்த ஒரு வரிக் குறைப்பும் வரவேற்கத்தக்கதுதான் என்று மத்திய பட்ஜெட்டை வரவேற்கும் விதமாக கார்த்தி சிதம்பரம் எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லி: எந்த ஒரு வரிக் குறைப்பும் வரவேற்கத்தக்கதுதான். ஏனென்றால் மக்கள் கையில் அதிக பணத்தை கொடுப்பதுதான் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த சிறந்த வழிமுறையாகும் என்று மத்திய பட்ஜெட்டை வரவேற்கும் விதமாக கார்த்தி சிதம்பரம் எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.
2023-2024 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியானது. குறிப்பாக மத்திய பட்ஜெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் மற்றம் உள்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டார்.
வருமான வரி விலக்கு.. அது என்ன 3 லட்சம், 7 லட்சம்? நிர்மலா அறிவிப்பால் குழம்பிய மக்கள்.. இதோ விளக்கம்
மத்திய பட்ஜெட்
அதேபோல சிகரெட் மீதான சுங்கவரி உயர்த்தப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி, வைரம் மீதான இறக்குமதி வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரப்பர் மீதான இறக்குமதி வரி 25 சதவீதமாக அறிவித்துள்ளது. தொலைக்காட்சி பேனல்கள் மீதான வரி 2.5 சதவீதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செல்போன் உதிரிபாகங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. இறால் உணவுகள் மீதான சுங்க வரி குறைக்கபட்டுள்ளது. ரயில்வே துறைக்கு இதுவரை இலலாத அளவாக 2.40 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மோடி பாராட்டு
மத்திய அரசின் நிதி நிலையை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் சிறப்பான பட்ஜெட் என்றும் விவசாயிகள், சாமானிய மக்கள் இந்த பட்ஜெட் மூலம் பயனடைவார்கள். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பாராட்ட தக்கது. அனைத்து தரப்பினருக்கும் பலன் அளிக்கும் சிறப்பான பட்ஜெட்டாக உள்ளது எனவும் பிரதமர் மோடி பட்ஜெட் குறித்து தனது கருத்தை தெரிவித்தார்.
கார்த்தி சிதம்பரம் கருத்து
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி எம்.பி கார்த்தி சிதம்பரமும் பட்ஜெட்டிற்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். கார்த்தி சிதம்பரம் கூறுகையில், "குறைந்தவரிகள் கொண்ட ஆட்சி முறையை நம்புவன் நான். எனவே எந்த ஒரு வரிக் குறைப்பும் வரவேற்கத்தக்கதுதான். ஏனென்றால் மக்கள் கையில் அதிக பணத்தை கொடுப்பதுதான் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த சிறந்த வழிமுறையாகும்" என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் விமர்சனம்
கார்த்தி சிதம்பரம் பட்ஜெட்டை வரவேற்கும் விதமாக கருத்து தெரிவித்து இருந்தாலும் காங்கிரஸ் கட்சி மத்திய பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் மத்திய பட்ஜெட் குறித்து கூறுகையில், எளிய மக்களின் அவல நிலை உள்பட நாட்டில் நிலவும் முக்கியமான பொருளாதார சூழல்களுக்கு தீர்வு காணும் வகையில் மத்திய பட்ஜெட் இல்லை. விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பு இன்மை போன்ற தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் மத்திய பட்ஜெட் உள்ளதா ? என்பதுதான் உண்மையான பிரச்சினை. மக்களுக்கு வருமானமே இல்லை. இப்படி இருக்கும் போது வரி உச்ச வரம்பை உயர்த்தினால் மட்டும் மக்கள் எப்படி பயன் அடைவார்கள்? என்றார்.