மத்திய அரசு தரும் ஜாக்பாட் பரிசு! ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வரை சம்பாதிப்போருக்கு.. வருமான வரி குறைப்பு
டெல்லி: ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் அறிவிப்பின் போதும் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு உயர்த்தப்படுமா என்பதே பலருக்கும் எதிர்பார்ப்பாக இருக்கும். இதற்கிடையே மத்திய அரசு வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் ரூ. 15 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கான வருமான வரியைக் குறைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது மிடில் கிளாஸ் மக்களுக்கு நிஜமாகவே ஒரு தித்திப்பான ஒரு தகவல் என்பதில் சந்தேகம் இல்லை.
நமது நாட்டில் அதிக வருமான வரியை மிடில் கிளாஸ் மக்கள் தான் செலுத்துகிறார்கள். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் சமயத்தில் வருமான வரி விலக்கு உயர்த்தப்படுமா என்ற கேள்வி பலருக்கும் வரும்.

கடந்த பட்ஜெட் சமயத்திலும் கூட வருமான வரி உயர்த்தப்படும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். இருப்பினும், கடந்த பட்ஜெட்டில் இது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் இடம்பெறவில்லை.
வருமான வரி குறைப்பு:
இதற்கிடையே வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கான வருமான வரியைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக இரு அரசு அதிகாரிகள் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் மந்தமாக இருக்கும் நிலையில், பொதுமக்களின் நுகர்வை அதிகரிக்க மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
வருமான வரி குறைக்க முடிவு செய்துள்ள போதிலும் இன்னும் எவ்வளவு தூரம் வருமான வரியைக் குறைப்பது என்பதில் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தேதி நெருங்கும் போது இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அந்த அதிகாரி கூறியதாக ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.
புதிய வரி முறை:
இந்த வருமான வரி குறைப்பால் மத்திய அரசுக்கு எந்தளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்ற கேள்விக்குப் பதிலளிக்க அந்த அதிகாரி மறுத்துவிட்டார். இருப்பினும், இந்த புதிய அறிவிப்பால் பொதுமக்கள் பலரும் புதிய வரி முறையைத் தேர்வு செய்வார்கள் என்றும் அது எளிமையாகவும் அதிக விலக்கும் தருவதால் அதைத் தேர்வு செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி:
கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி பொருளாதார வல்லுநர்களை நேரில் சந்தித்தார். பட்ஜெட் எப்படி இருக்கலாம் என்பது குறித்த அவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.அப்போது பொருளாதார வல்லுநர்கள் பலரும் வருமான வரியைக் குறைக்கவே கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. மேலும், இறக்குமதி வரியில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருமாறும், ஏற்றுமதியை அதிகரிக்கும் திட்டங்களைக் கொண்டு வருமாறும் அவர்கள் கோரிக்கை வைத்தாகத் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய வருமான வரி சட்டம்:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2025ம் தேதி தாக்கல் செய்ய இருக்கிறார். கடந்தாண்டு பட்ஜெட்ல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமான வரி சட்டம் குறித்துப் பேசியிருந்தார். அதைத் தொடர்ந்து வருமான வரித்துறை முதன்மை ஆணையர் வி.கே.குப்தா தலைமையில் ஆய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த ஆய்வுக் குழு குழு அடுத்த பட்ஜெட்டிற்கு முன்பு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளது.
இருப்பினும், புதிய சட்டம் நடப்பாண்டில் அமலுக்கு வர வாய்ப்பில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகிறது. இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "புதிய வருமான வரி சட்டம் அடுத்தாண்டு அமலுக்கு வராது. அது முற்றிலும் புதிய சட்டமாக இருப்பதால்.. உடனே அமல்படுத்த முடியாது. சிஸ்டம் அதற்கேற்ப மாற வேண்டும். விதிகள், புதிய படிவங்கள் என எல்லாம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அதற்கு டைம் ஆகும். புதிய சட்டத்தில் வருமான வரி தாக்கல் ஈஸியாக இருக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications