சென்னையின் அடுத்த ரயில் முனையமாக மாறும் ஆவடி! பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கப்படுமா!
டெல்லி: நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்நிலையில் தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்த பட்ஜெட்டில் இதற்கான போதுமான நிதி ஒதுக்கப்படுமா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை 3 பெரிய திட்டங்களுக்கு நீண்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதாவது,
1.மதுரை-கன்னியாகுமரியில் இருவழிப்பாதை
2.சேலம்-தருமபுரி வழி: ஓமலூர் வழித்தடத்தில் இருவழிப்பாதை
3.சென்னையின் அடுத்த முனையமாக ஆவடி அல்லது திருவள்ளூர்
சென்னை எழும்பூரிலிருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சென்னை எழும்பூர்-மதுரை வரை மட்டுமே 2 வழி ரயில் தடங்கள் இருக்கின்றன. மதுரை தொடங்கி விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி வரை 1 வழிப்பாதை மட்டுமே இருக்கிறது. எனவே, இந்த வழித்தடத்தை 2 வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்று தென் மாவட்ட ரயில் பயணிகளிடையே நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகிறது.
அதேபோல சேலம் முதல் தருமபுரி வரை, ஓமலூர் வழியாக செல்லும் ரயில்களுக்கும் ஒருவழிப்பாதைதான் இருக்கிறது. இதனையும் இருவழிப்பாதையாக மாற்றினால் மேற்கு மாவட்டங்களின் வளர்ச்சி வேகமடையும்.
மூன்றாவது மிக முக்கியமான கோரிக்கை. அதாவது சென்னையின் அடுத்த ரயில் முனையமாக ஆவடியை மாற்ற வேண்டும் என்பதுதான். இதற்கான வாய்ப்புகள் இல்லாத பட்சத்தில் திருவள்ளூரை மாற்றலாம் என்றும் ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சென்னையை பொறுத்தவரை தற்போது எழும்பூர், சென்ட்ரல் மற்றும் தாம்பரம் என 3 ரயில் முனையங்கள் இருக்கின்றன. இந்நிலையில் 4வது ரயில் முனையத்தை உருவாக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை எழுந்து வருகிறது.
சென்னையின் புறநகர் பகுதிகள் வேகமாக விரிவடைந்து வருகின்றன. மக்கள் குடியிருப்புகள் வேகமாக அதிகரித்திருக்கிறது. உதாரணமாக ஆவடியில் இருக்கும் பயணி, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு போக வேண்டும் எனில் சென்ட்ரல் வந்துதான் ரயிலை பிடிக்க வேண்டும். ஆவடி டூ சென்டரல் வர எப்படியும் 1 மணி நேரம் வரை ஆகிவிடும். எனவே இந்த நேர இடைவெளியை குறைக்க ஆவடி-சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இடையில் ஒரு முனையத்தை உருவாக்க வேண்டும் என்று நீண்ட காலமாக எதிர்பார்த்து வருகின்றனர்.
4வது ரயில் முனையம் குறித்து சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதாவது "சென்னையில் நான்காவது ரயில் முனையம் வில்லிவாக்கம்-பெரம்பூர் இடையே அமைப்பது குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு ரயில்வே வாரிய ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது" என்று சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா கூறியிருந்தார்.
இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து நிதியும் ஒதுக்கப்பட்டால் விரைவில் சென்னை மக்களுக்கும், மேற்கு மாவட்ட மக்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும். எனவே இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications