கேரளா, குஜராத் உட்பட 4 மாநிலங்களில் 5 தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல்! இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்
டெல்லி: கேரளா, குஜராத், பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் காலியாக இருக்கும் 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. நாளை காலை இந்த 5 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படு வரும் ஜூன் 23ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்தியாவில் உள்ள சட்டத்தின்படி சட்டசபை அல்லது நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானால் ஆறு மாதங்களில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஒரு தொகுதியின் பிரதிநிதி உயிரிழந்தால் அல்லது ராஜினாமா செய்தால் அடுத்த 6 மாதங்களில் அங்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அந்த தொகுதிக்கான மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகக்கூடாது என்பதற்காகவே ஆறு மாதங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற இந்த விதி இருக்கிறது.

அதன்படி கேரளா, குஜராத், பஞ்சாப், மேற்கு வங்க மாநிலங்களில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்குத் தேவையான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. நாளை காலை முதல் வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
குஜராத்தில் உள்ள காடி மற்றும் விசாவதர் ஆகிய இரு தொகுதிகள், கேரளாவில் உள்ள நிலம்பூர், பஞ்சாபில் உள்ள லூதியானா மேற்கு, மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச் ஆகிய சட்டசபை தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதில் குஜராத்தின் விசாவதர் மற்றும் கேரளாவின் நிலம்பூர் தொகுதிகளில் எம்எல்ஏவாக இருந்தவர்கள் ராஜினாமா செய்தனர். குஜராத்தின் காடி, பஞ்சாபின் லூதியானா மேற்கு மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள காளிகஞ்ச் தொகுதிகளின் பிரதிநிதிகள் உயிரிழந்ததால் அங்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
நாளை காலை முதல் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மக்கள் வாக்களிக்கலாம். விவிபேட்களும் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் பயன்படுத்தப்பட உள்ளது. நாளை காலை 7 மணி முதல் மாலை வரை இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும். இதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், தொடர்ந்து ஜூன் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications