500க்கும் மேற்பட்ட சீனா பொருட்களை இறக்குமதி செய்யாமல் புறக்கணிப்போம்- இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு
டெல்லி: சீனாவின் 500க்கும் மேற்பட்ட பொருட்களை இறக்குமதி செய்யாமல் புறக்கணிப்போம் என்று அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
லடாக்கின் கிழக்கு பகுதியில் இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமிக்க முயன்றது. இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து சீன வீரர்களை விரட்டி அடித்தனர்.

20 இந்திய வீரர்கள் வீர மரணம்
அப்போது நிகழ்ந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 43 ராணுவத்தினர் பலியாகி உள்ளனர். இதனால் எல்லையில் மிகப் பெரிய அளவுக்கு யுத்த சூழல் உருவாகி உள்ளது. இந்த விவகாரத்தை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்தும் வருகின்றன.

நாட்டில் கொந்தளிப்பு
இதனிடையே சீனாவின் கொடூரமான தாக்குதல் நாடு முழுவதும் பெரும் கோபத்தை பொதுமக்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் சீனாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. சீனாவின் தேசிய கொடி எரிக்கப்பட்டும் சீன பொருட்கள் உடைக்கப்பட்டும் போராட்டங்கள் நடைபெற்றன.

சீனா பொருட்கள் புறக்கணிப்பு
இந்த நிலையில் சீனாவில் இருந்து 500க்கும் மேற்பட்ட பொருட்களை இறக்குமதி செய்யாமல் புறக்கணிப்போம் என்று அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. எந்தெந்த பொருட்களை இறக்குமதி செய்யக் கூடாது என்கிற பட்டியலையும் அது வெளியிட்டுள்ளது. சீனாவில் இருந்து பொம்மைகள், வீட்டு உபயோகப் பொருட்கள். ஆட்டோ உதிரிபாகங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவதைதான் தற்போது இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றை இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது வர்த்தகர் கூட்டமைப்பு.
Recommended Video

உள்நாட்டிலேயே உற்பத்தி
இப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பதில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும்; இதனை நாம் ஊக்குவித்தாலே சீனாவை சார்ந்து இருக்க தேவை இல்லை; சீனாவின் ஏற்றுமதி வர்த்தகமும் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளும் என்கின்றனர் அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு நிர்வாகிகள். இதன் மூலம் சீனாவுக்கு ரூ1லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்த முடியுமாம். இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications