கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பயணத்தில் திடீர் மாற்றம்.. கூடுதலாக ஒருநாள் இந்தியாவில்.. ஏன் தெரியுமா?
டெல்லி: ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய பயணத்தை நிறைவு செய்து இன்று சொந்த நாட்டிற்கு செல்ல இருந்தார். ஆனால் விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறால் அவரது பயண திட்டம் தாமதகம் ஆகியுள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் , கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட உலக தலைவர்களும் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஜி 20 உச்சி மநாட்டில் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டம் இன்றுடன் முடிந்ததையடுத்து தலைவர்கள் தங்கள் நாட்டிற்கு புறப்பட்டு சென்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வியட்நாம் செல்ல திட்டமிட்டு இருந்தார். அதன்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட அமெரிக்காவின் உயர் மட்ட குழுவினர் புறப்பட்டு சென்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிபருக்கான பிரத்யேக ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் புறபட்டு சென்றார்.
அதேபோல், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவருடன் வந்த அதிகாரிகள் குழுவினர் ஜி 20 மாநாட்டில் பங்கேற்று விட்டு இன்று இரவு கனடா புறப்பட இருந்தனர். இரவு 8 மணியளவில் கனடா விமானம் புறப்பட இருந்த நிலையில், விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு இருப்பதை கனடா பாதுகாப்பு அதிகாரிகள் குழு கண்டறிந்தது.
இதையடுத்து கோளாறை சீர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனினும், இதற்கு பல மணிநேரம் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், கனடா பிரதமரின் பயணம் தாமதம் ஆகியுள்ளது. இன்று இரவு இந்தியாவிலேயே தங்கிவிட்டு நாளை தான் மாற்று விமானம் மூலம் கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ தாயகம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications