எந்தவொரு நபரையும்.. வேக்சின் போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்த முடியாது.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு
டெல்லி: இந்தியாவில் வேக்சின் பணிகள் தொடங்கப்பட்டு ஓர் ஆண்டு முடிந்துள்ள நிலையில் இது தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
தற்போதைய சூழலில் கொரோனாவை அழிக்கும் ஒரே பேராயுதமாக கொரோனா வேக்சின் மட்டுமே பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் வேக்சின் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் கொரோனா வேக்சின் பணிகள் தொடங்கப்பட்டு நேற்றுடன் ஓர் ஆண்டு முடிவடைகிறது. நமது நாட்டில் சுமார்150 கோடி வேக்சின்களுக்கு மேல் போடப்பட்டுள்ளது.

வேக்சின் சான்றிதழ்
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் வேக்சின் போடும் பணிகளை வேகப்படுத்தப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாகத் திரையரங்கு உள்ளிட்ட சில பொது இடங்களுக்குச் செல்ல கொரோனா வேக்சின் சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கொரோனா பரவலையும் கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ள நபர்களைக் காக்கும் என்பதே அரசின் வாதம்.

வழக்கு
அதேநேரம் கொரோனா வேக்சின்கள் உயிரிழப்பையும் மோசமான பாதிப்புகளையும் தடுப்பது தெளிவாகத் தெரியும் போதிலும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பேர் வேக்சின் போட்டுக்கொள்ளத் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர். இதனிடையே மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து வீடு வீடாகச் சென்று வேக்சின் செலுத்துவது தொடர்பாக ஈவாரா அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

அறிவிப்பு இல்லை
இந்த வழக்கில் பொது இடங்களில் வேக்சின் சான்றிதழ் தொடர்பாக மத்திய அரசு பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது. அதில், "எந்தவொரு இடத்திற்கும் எதற்காகவும் தடுப்பூசி சான்றிதழை எடுத்துச் செல்வதைக் கட்டாயமாக்கும் எந்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை. மத்திய அரசு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி சம்பந்தப்பட்ட நபரின் அனுமதியைப் பெறாமல் வலுக்கட்டாயமாக எந்தவொரு நபருக்கும் தடுப்பூசி போடப்படாது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை
அதேபோல இந்த விவகாரத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமும் தனியாகப் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது. அதில், "சமூகத்தில் பொதுமக்களின் நலன் கருதியே வேக்சின் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் முடிந்தவரை வேகமாக வேக்சின் போட்டுக் கொள்ள வேண்டும் என்று ஊடகங்கள் வாயிலாகத் தொடர்ந்து கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Recommended Video

கட்டாயப்படுத்த முடியாது
இருப்பினும், எந்தவொரு நபரும் அவர்களின் விருப்பத்திற்கு எதிராக வேக்சின் போடும்படி கட்டாயப்படுத்த முடியாது," என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது வேக்சின் போட்டுக்கொள்வதை அரசு ஒரு போதும் கட்டாயமாக்கவில்லை என்பதை அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அதேநேரம் இப்போது ஏற்பட்டுள்ள 3ஆம் அலையிலும் கூட வேக்சின் போடாத நபர்களின் உடல்நிலை மட்டுமே மோசமான நிலைக்கு ஐசியு சிகிச்சை தேவைப்படும் அளவுக்குச் செல்வதாகவும் எனவே பொதுமக்கள் அனைவரும் வேக்சின் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் சுகாதார வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications