நேற்று அமித்ஷா- இன்று அஜித் தோவலுடன் சந்திப்பு... காங். மேலிடத்தை கதறவிடும் அமரீந்தர்சிங்!
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங் இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் 23 அதிருப்தி தலைவர்கள் குழுவையும் அமரீந்தர்சிங் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர்சிங்குக்கு எம்.எல்.ஏக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதனால் தமது பதவியை அமரீந்தர்சிங் ராஜினாமா செய்தார்.
தமது பதவி பறிப்புக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவராக்கப்பட்ட சித்துதான் காரணம் என்பதால் அவர் மீது கடும் கோபத்தால் உள்ளார் அமரீந்தர் சிங். இன்னொரு பக்கம் சித்துவிடம் ஆலோசனை கேட்காமல் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். இதனால் சித்து, பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
சித்து மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் அமரீந்தர்சிங். பாகிஸ்தான் பிரதமர், ராணுவதளபதியுடன் நெருக்கமான உறவு வைத்திருப்பவர் சித்து; அவரால் தேச பாதுகாப்புக்கு ஆபத்து என கடுமையாகவும் விமர்சித்திருந்தார் அமரீந்தர்சிங். இந்நிலையில் திடீரென நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை அமரீந்தர்சிங் சந்தித்து பேசியது பரபரப்பை கிளப்பிவிட்டது.

விவசாயிகள் போராட்டம்
ஆனால் 10 மாதங்களாக நடைபெறும் விவசாயிகள் போராட்டம் குறித்து அமித்ஷாவுடன் ஆலோசித்தேன். புதிய விவசாய சட்டங்கள், விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச விலை உள்ளிட்டவை குறித்து விவாதித்தோம் என்றார். இருந்த போதும் அமித்ஷாவுடனான சந்திப்பு என்பது பாஜகவுடன் இணக்கமான போக்குக்கு அமரீந்தர்சிங் தயாராகிவிட்டதையும் விரைவில் பாஜகவில் சேரலாம் அல்லது தனிக்கட்சி தொடங்கி பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்கிற நிலைக்கு வந்துவிட்டதையும் உறுதி செய்வதாகவே இருந்தது.

அஜித் தோவலுடன் சந்திப்பு
இந்நிலையில் இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை அமரீந்தர்சிங் சந்தித்து பேசினார். எல்லை மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர் அமரீந்தர்சிங். ஆகையால் எல்லை நிலவரங்கள் குறித்து அஜித் தோவலிடம் உரையாடி இருக்கலாம் என்கின்றன டெல்லி தகவல்கள்.

காங். அதிருப்தி தலைவர்கள்
டெல்லியில் முகாமிட்டிருக்கும் அமரீந்தர்சிங், காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி தலைவர்களையும் சந்தித்து பேசக் கூடும் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள். சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 அதிருப்தி தலைவர்கள் இப்போது அமரீந்தர்சிங்குக்கு ஆதரவாக உள்ளனர். அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த கபில்சிபல் வீடு முன்பாக டெல்லி காங்கிஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும் மணீஷ் திவாரி வெளிப்படையாக அமரீந்தர் சிங்கை ஆதரித்து கருத்து தெரிவித்திருக்கிறார். அமரீந்தர்சிங்கின் இந்த டெல்லி பயணமானது காங்கிரஸ் மேலிடத்தை கதி கலங்க வைத்திருக்கிறது என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications