என்னது தேர்தல் வெற்றி செல்லாதா.. வழக்கு போட்டு நேரத்தை வீணடிக்கிறார்! கனிமொழி தரப்பில் பரபரத்த வாதம்
டெல்லி: தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழி பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
வேட்பாளரே இல்லாத ஒருவர் தொடர்ந்த வழக்கால் தனது பணிகள் பாதிக்கப்படுவதாக கனிமொழி தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு மனுதாரர் சந்தான குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எல்லாம் சட்டப்படியே வழக்குத் தொடரப்பட்டதாக பதில் வாதத்தை முன் வைத்துள்ளார்.
3 மேட்டர்.. 2 அல்டிமேட் பிளான்.. எல்லாமே போச்சா.. இதான்
தூத்துக்குடி தொகுதி
கடந்த 2019ஆம் ஆண்டு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி அமோக வெற்றி பெற்றார். சுமார் 5.25 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி இவர் தொகுதிப்பணிகளில் வேகமும் சுறுசுறுப்பும் காட்டி வருகிறார். இந்நிலையில் கனிமொழி பெற்ற வெற்றி செல்லாது எனக் கோரியும் அவரது வெற்றியை எதிர்த்தும் சந்தான குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
உச்சநீதிமன்றம்
இந்த வழக்கிற்கு தடைகோரி கனிமொழி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனிடையே இவ்வழக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையிலேயே இருந்த நிலையில், இறுதி விசாரணைக்கு இன்று வந்தது. நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்திய நிலையில் வழக்கை அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தது.
வழக்கறிஞர் வில்சன்
இதனிடையே கனிமொழி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், கனிமொழி வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்திருப்பவர் வாக்காளர் தான் என்றும் அவர் வேட்பாளர் கிடையாது எனவும் நீதிபதிகளிடம் எடுத்துக் கூறினார். மேலும், மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு கனிமொழியின் கணவர் பான் கார்டு எண் சேர்க்கப்படவில்லை என்பது தான் என்றும் அவர் வெளிநாடு வாழ் இந்தியர் எனவும் வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார். வேட்பாளரே இல்லாத ஒருவர் தொடர்ந்த வழக்கால் கனிமொழியின் பணிகள் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.
அக்டோபர் மாதம்
இதற்கு பதில் வாதம் செய்த மனுதாரர் சந்தானகுமார் தரப்பு வழக்கறிஞர், உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகளின் படியே வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைப்பதகாக தெரிவித்தனர்.