பில்கிஸ் பானு கூட்டு பலாத்காரம்.. 11 குற்றவாளிகள் விடுதலை செல்லுமா? இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை
டெல்லி: குஜராத் கலவரத்தில் கர்ப்பிணி பில்கிஸ் பானு உள்ளிட்ட 3 பேரை கூட்டு பலாத்காரம் செய்து குழந்தை உட்பட 7 பேரை கொன்ற 11 பேர் கொண்ட கும்பலை குஜராத் அரசு முன்விடுதலை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
கடந்த 2002 ஆம் பிப்ரவரி 27 ஆம் தேதி குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற ஐந்தே மாதங்களில், உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி ரயில் கோத்ரா பகுதியில் தீப்பிடித்து எரிந்தது.
இந்த சம்பவத்தில் 59 இந்து யாத்திரிகர்கள் கொல்லப்பட்டனர். 2005 ஆம் ஆண்டு இது தொடர்பாக மத்திய அரசு அமைத்த விசாரணை ஆணையம், ரயில் பெட்டியில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே பலர் உயிரிழந்ததாகவும், தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தது.
குஜராத் பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கு: 11 பேர் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!
கலவரம்
இதற்கு இஸ்லாமியர்களே காரணம் எனக்கூறி இந்துத்துவ அமைப்பினர் குஜராத் முழுவதும் ரயில் எரிந்த அதே நாளில் தாக்குதல்களை தொடங்கினர். காவல்துறையின் கட்டுப்பாடுகள் இன்றி கோரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. 2 வாரங்கள் கட்டுக்கடங்காமல் நடந்த வன்முறையில் 20,000 இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள், 360 மசூதிகள் அழிக்கப்பட்டன. 1.5 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.
பில்கிஸ் பானு
28 ஆம் தேதி தொடங்கிய கலவரம் மார்ச் மாதம் வரை நீண்டது. மார்ச் 3 ஆம் தேதி தஹோத் மாவட்டத்தில் உள்ள ரந்திக்புர் கிராமத்தில் கலவரம் வெடித்தது. அப்போது 30 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பில்கிஸ் பானு மற்றும் அவரது சிறுவயது மகள் மற்றும் பிற 15 குடும்ப உறுப்பினர்களைத் தாக்கியது. இதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
கூட்டு பலாத்காரம்
அப்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த 19 வயது பெண் பில்கிஸ் பானு, அவரது தாய் மற்றும் சகோதரி ஆகியோர் அந்த கலவர கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டனர். நாட்டையே அதிர வைத்த இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதன் முதல் கட்ட விசாரணை குஜராத்தின் அகமதாபாத்தில் தொடங்கப்பட்டது.
ஆயுள் தண்டனை
ஆனால், சாட்சிகளை அழித்ததாகவும் மற்றும் சாட்சியங்களை சேதப்படுத்தியதாகவும் கூறி மும்பைக்கு வழக்கு மாற்றப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கும் 2008 ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றம் இவர்களின் தண்டனையை உறுதி செய்தது.
விடுதலை
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 11 பேரும் குஜராத் அரசு பொதுமன்னிப்புக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்ததாலும், குற்ற தன்மையை கருத்தில் கொண்டும் விடுவிக்க ஆணை பிறப்பித்தது. இதனை தொடர்ந்து தண்டனை பெற்ற 11 பேரும் கோத்ரா துணைச் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆரத்தி எடுத்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் விசாரணை
11 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடசாரிகள், இஸ்லாமிய அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பெண்ணியவாதிகள், அமீரக இளவரசி என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், 11 பேர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க இருக்கிறது.