ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கு: தமிழக அரசுக்கு சாதகமாக உத்தரவிடுமா சுப்ரீம் கோர்ட்? மீண்டும் விசாரணை!
டெல்லி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 23ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவித்திருந்தது.

மேலும், மசோதாக்களை இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய பின்னர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஏன் என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி அமர்வு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை ஆளுநர் முடக்கி வைக்க முடியாது என தெளிவுபடுத்தியது. அதோடு, ஆளுநர் - முதலமைச்சர் இருவரும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும் என்றும் யோசனை தெரிவித்தது.
இதனையடுத்து மசோதாக்கள் ஒப்புதல் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்தார். இதையடுத்து கடந்த டிசம்பர் 30ஆம் தேதி ஆளுநரை நேரில் சந்தித்துப் பேசினார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அப்போது, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும்படி மீண்டும் ஆளுநர் ரவியை வலியுறுத்தினார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 23ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அரசியல் சாசனப்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்று ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications