ஜூன் மாத நதிநீர் திறப்பு, பங்கீடு- காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதம்! மேகதாது லிஸ்ட்டில் இல்லை!
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் ஜூன் மாத நதிநீர் பங்கீடு தொடர்பாக இன்று விவாதிக்கப்பட்டது.
காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தமது இறுதித் தீர்ப்பை வழங்கியது. இத்தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு 192 டிஎம்சி நீர் வழங்க காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உச்சநீதிமன்றமானது காவிரி வழக்கில் 2018-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. தமிழ்நாட்டுக்கான காவிரி நீர் அளவை 177.25 டிஎம்சியாக குறைத்தது. காவிரி நதிநீர் வழக்கில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த உருவாக்கப்பட்டது காவிரி மேலாண்மை ஆணையம். காவிரி நதிநீர் பங்கீடுகள் தொடர்பாக முடிவெடுக்கத்தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த மேலாண்மை ஆணையத்தின் 20-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை சேர்க்க கர்நாடகா கோரியது. ஆனால் தமிழ்நாடு அரசு இதனை ஏற்க மறுத்தது. இதனால் இன்றைய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் மேகதாது அணை விவகாரம் சேர்க்கப்படவில்லை.
ஜூன் மாதம் பாசன ஆண்டு தொடங்குகிறது. ஆகையால் காவிரி நதிநீர் திறப்பு, பங்கீடு குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications