ஹாத்ரஸ் இளம்பெண்... பலாத்காரம் செய்துதான் கொல்லப்பட்டார்...சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!
டெல்லி: உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரசில் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையான வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, அந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் இன்று தாக்கல் செய்தது.
அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என உத்தரபிரதேச போலீசார் கூறிய நிலையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார் என குற்றப்பத்திரிகையில் சிபிஐ தெரிவித்து உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ரஸில் 19 வயது இளம்பெண் 4 வாலிபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை உத்தரபிரதேச போலீசார் முதலில் விசாரித்து வந்தனர். அந்த பெண்ணின் உடலை அவர்கள் இரவோடு, இரவாக அவசரமாக தகனம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
மேலும், அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர். குற்றவாளிகளை போலீசார் காப்பாற்ற முயல்வதாகவும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்தனர்.அந்த 4 பேர் கைது செய்யபட்டனர். அதன் பிறகு மாநில அரசு பரிந்துரையின் பேரில், மத்திய அரசு உத்தரவின் பேரில் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
ஹத்ராஸ் சம்பவத்தை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி மனைவி தற்கொலை.. உ.பி.யில் ஷாக்
15 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் ஹத்ராஸ் சென்று விசாரணை நடத்தினர். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சிபிஐ இந்த வழக்கு தொடர்பான குற்றபத்திரிகையை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது.
இறந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என உத்தரபிரதேச போலீசார் கூறிய நிலையில், அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என சிபிஜ அந்த குற்ற பத்திரிகையில் தெரிவித்து உள்ளது. குற்றவாளிகள் 4 பேரின் பெயர்களும் குற்ற பத்திரிகையில் சேர்க்கப்பட்டு உள்ளது.
மேலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பிரிவு 376 டி(கற்பழிப்பு) பிரிவு 302(கொலை செய்தல்) மற்றும் சட்ட பிரிவுகள் 354 மற்றும் 376 ஏ கீழ் வழக்கு பதிவு செய்து சிறப்பு அறிக்கை குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.