புல்வாமா தாக்குதல்-மத்திய பாஜக அரசை அலறவிட்ட மாஜி ஆளுநர் சத்யபால் மாலிக் வீட்டில் சிபிஐ திடீர் சோதனை
டெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் டெல்லிவீடு உள்ளிட்ட 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீரென அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 40 ராணுவ வீரர்களை பலி கொண்ட புல்வாமா தாக்குதலுக்கு மத்திய பாஜக அரசுதான் காரணம் என அப்போதைய ஜம்மு காஷ்மீர் ஆளுநராக சத்யபால் மாலிக் பகீர் குற்றம்சாட்டி இருந்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்ட சத்யபால் மாலிக் வீட்டில் தற்போது சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநராக 2018-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் சத்யபால் மாலிக். அவரது பதவி காலத்தில் கிரு நீர்மினிட்ட ஒப்பந்தத்துக்காக ரூ300 கோடி ஊழல் முறைகேடு நடைபெற்றது என்பது குற்றச்சாட்டு. செனாப் ஆற்றின் குறுக்கே கிஸ்த்வார் மாவட்டத்தில் 624 மெகாவாட் கிரு நீர்மின்சாரத் திட்டத்தை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது புகார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் டெல்லியில் உள்ள முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீடு உள்ளிட்ட 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீட்டில் சிபிஐ சோதனை நடத்துவது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சத்யபால் மாலிக் பிரச்சனை என்ன?: 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக சில ஆண்டுகளுக்கு சத்யபால் மாலிக் தெரிவித்த கருத்துகள் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது.
புல்வாமா தாக்குதலுக்கே மத்திய பாஜக அரசுதான் காரணம்; ஜம்முவில் இருந்து சிஆர்பிஎப் வீரர்கள் ஸ்ரீநகருக்கு செல்ல விமானங்களை கேட்டும் மத்திய அரசு தர மறுத்தது; இதனால் சாலைவழியாக ராணுவ வீரர்கள் செல்ல நேரிட்டது. விமானம் மூலம் வீரர்கள் சென்றிருந்தால் புல்வாமாவில் தாக்குதலே நடந்திருக்காது என்பதும் சத்யபால் மாலிக்கின் குற்றச்சாட்டு. அப்போது பிரதமர் மோடியிடம் இதனை தாம் தெரிவித்த போதும் தம்மை மோடி அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்தியதாகவும் கூறியிருந்தார் சத்யபால் மாலிக். இந்த புல்வாமா தாக்குதலுக்கு பின்னர்தான் பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் நமது ராணுவ வீரர்கள் உள்ளே நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தி இருந்தனர்.
மேலும் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக தாம் பதவி வகித்த போது கிரு நீர்மின்சார திட்டம் உள்ளிட்ட 2 திட்டங்களுக்கு ஒப்புதல் தர லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளையும் தெரிவித்திருந்தார். தற்போது குற்றச்சாட்டுகளை முன்வைத்த முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications