தேசிய பங்கு சந்தை மோசடி- சித்ரா ராமகிருஷ்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கஸ்டடியில் எடுக்கிறது சிபிஐ
டெல்லி: தேசிய பங்கு சந்தையான என்.எஸ்.இ.-ன் முன்னாள் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணனை சிபிஐ கஸ்டடியில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளது.
தேசிய பங்கு சந்தை தொடர்பான தகவல்களை பெரும் பணம் பெற்றுக் கொண்டு தனிநபர்களிடம் தரகர்களிடம் பகிர்ந்தது, தேசிய பங்கு சந்தை சர்வர்களை பிற நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதித்தது என ஏராளமான ஊழ முறைகேடுகளில் சித்ரா ராமகிருஷ்ணன், அவரது கூட்டாளி ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோர் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இருவர் மீதும் பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி 2015-ம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐ 2018-ம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வருகிறது. இருவர் மீதும் இத்தனை ஆண்டுகளாகியும் விரைவான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில்தான் அண்மையில் ஆனந்த் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று சித்ரா ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இருவரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். சித்ரா ராமகிருஷ்ணனை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக சித்ரா ராமகிருஷ்ணன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சிபிஐ நீதிமன்றம்,இத்தனை ஆண்டுகளாக விசாரணை நடத்தியும் ஏன் இவ்வளவு தாமதமான நடவடிக்கை என கேள்வி எழுப்பியிருந்தது.
சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த் சுப்பிரமணியன் இருவருமே பல்வேறு தகவல்களை சிபிஐ, செபி அதிகாரிகளிடம் மறைத்தும் வருகின்றனர். குறிப்பாக இமயமலை சாமியார் தொடர்பான விவரங்களை தெரிவிக்காமல் மழுப்பி வருகின்றனர். இந்த சாமியார்தான் ஒட்டுமொத்தமாக தேசிய பங்கு சந்தையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர். தற்போது சித்ரா ராமகிருஷ்ணனனை கஸ்டடியில் எடுப்பதன் மூலம் சாமியார் குறித்த தகவல்கள் வெளியாகக் கூடும் எனவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications