CBI vs CBI: சிபிஐ சிறப்பு இயக்குனர் ஊழல் செய்துள்ளார்.. ஆதாரம் உள்ளது.. சிபிஐ இயக்குனர் பகீர்!
சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதற்கான எல்லா ஆதாரமும் இருக்கிறது என்று சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா டெல்லி ஹைகோர்ட்டில் தெரிவித்துள்ளார்.
டெல்லி: சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதற்கான எல்லா ஆதாரமும் இருக்கிறது என்று சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா டெல்லி ஹைகோர்ட்டில் தெரிவித்துள்ளார்.
சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மத்திய அரசால் கட்டாய விடுப்பில் செல்ல ஆணையிடப்பட்டது. இதற்கு எதிராக அவர் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நேற்றுதான் விசாரணை நடந்து முடிந்தது.
இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா டெல்லி ஹைக்கோர்ட்டில் சிபிஐக்கு எதிராக தொடுத்த வேறு ஒரு வழக்கில் இன்று முக்கிய விசாரணை நடந்தது.
என்ன பிரச்சனை
குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் மொயின் குரேஷி பண மோசடி மற்றும் வரி மோசடி செய்த வழக்கில் சிக்கி இருக்கிறார். குரேஷியின் வழக்கில் தொடர்புடைய நபர்களை விடுவிக்க சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ அமைப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்தது. சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மூலம் அஸ்தானா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
வழக்கு தொடுத்தார்
இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டிற்கு எதிராக அஸ்தானா வழக்கு தொடுத்தார். இந்த குற்றச்சாட்டை எதிர்த்து அவர் டெல்லி ஹைக்கோர்ட்டில் தொடுத்த வழக்கில்தான் இன்று விசாரணை நடந்தது. இந்த வழக்கில் இன்று சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தான் ஏன், அஸ்தானா மீது எப்ஐஆர் செய்தேன் என்று விளக்கம் அளித்து மனுதாக்கல் செய்தார்.
விளக்கம்
இந்த பதில் மனுவில் அலோக் வெர்மா, அஸ்தானா லஞ்சம் வாங்கியதற்கான எல்லா ஆதாரமும் எங்களிடம் உள்ளது. அவருக்கு எதிரான முக்கியமான ஆதாரங்களை நாங்கள் வைத்து இருக்கிறோம். இதனால் அவர் மீதான விசாரணையை உடனடியாக தொடங்க வேண்டும். இதுதான் எப்ஐஆர் போட காரணம் என்று கூறினார்.
அனுமதி தேவையில்லை
மேலும் அஸ்தானா மீது எப்ஐஆர் பதிவு செய்ய மத்திய அரசின் அனுமதி தேவையில்லை. சிபிஐ இயக்குனருக்கே அந்த அதிகாரம் இருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் மிக முக்கியமானது. அதனால் அவரை முறையாக விசாரிக்க வேண்டும் என்றுள்ளார். இந்த வழக்கு விசாரணையும் அடுத்த வாரத்திற்குள் முடிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.