கொல்கத்தா கமிஷனருக்கு எதிரான முக்கிய ஆதாரம் தயார்.. இன்று சுப்ரீம் கோர்ட்டில் சமர்பிக்கிறது சிபிஐ!
கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமாருக்கு எதிரான வழக்கில் சிபிஐ சில முக்கியமான ஆதாரங்களை இன்று உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Recommended Video
டெல்லி: கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமாருக்கு எதிரான வழக்கில் சிபிஐ சில முக்கியமான ஆதாரங்களை இன்று உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிபிஐக்கும், மேற்கு வங்க போலீசுக்கும் இடையில் நடக்கும் பிரச்சனை இன்று அடுத்த கட்டத்தை எட்ட இருக்கிறது. கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமாரை விசாரிக்க கோரி சிபிஐ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடக்க இருக்கிறது. நேற்று இந்த வழக்கு குறித்த மனு தாக்கலின் போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா மேற்கு வங்க அரசுக்கும், காவல்துறைக்கும் எதிராக கடுமையான புகார்களை வைத்தார்.
நேற்று சிபிஐ இந்த மனுவில், சாரதா ஊழல் ஆவணங்களை கொல்கத்தா கமிஷனர் அழிக்க வாய்ப்பு இருக்கிறது. கொல்கத்தா போலீஸ் எப்போது வேண்டுமானாலும் இந்த ஆவணங்களை மொத்தமாக அழித்துவிட வாய்ப்புள்ளது. ஏற்கனவே இதற்காக அவர்கள் முயன்று வருகிறார்கள், என்று குற்றச்சாட்டு வைத்து இருந்தது.
கேள்வி
இந்த நிலையில் இதுகுறித்து கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், கொல்கத்தா போலீஸ் இந்த ஆவணங்களை அழித்துவிடும் என்பதை நிரூபிக்க உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? அதை நிரூபிக்க உங்களிடம் ஒரு ஆதாரம் இருந்தால் கூட போதும். நாங்கள் அவர்கள் மீது நினைத்து பார்க்க முடியாத நடவடிக்கையை எடுப்போம். ஆனால் உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? அதை சமர்ப்பிக்க முடியுமா என்று கேட்டார்.
இன்று வாய்ப்பு
இந்த நிலையில் சிபிஐ உண்மையாகவே இது தொடர்பான ஆவணங்களை இன்று சமர்ப்பிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது, சிபிஐ நேற்று முழுக்க இது தொடர்பான ஆவணங்களை தயார் செய்து இருக்கிறது. இன்று காலை அதை சீலிட்ட கவரில் சிபிஐ அளிக்க உள்ளது. இந்த ஆவணத்தை பொறுத்தே வழக்கு அடுத்தகட்டமாக நகரும்.
என்ன விவரம்
இந்த ஆவணத்தில், கமிஷனர் ராஜீவ் குமாருக்கு எதிராக சில முக்கிய நபர்கள் கொடுத்த வாக்குமூலங்கள் இருக்கிறதாம். சாரதா ஊழல் தொடர்பான ஒரு லேப்டாப், சில ஹார்ட் டிஸ்க்குகள், மேலும் சிலர் கொடுத்த வாக்குமூலம்தான் தற்போது சிபிஐ வசம் கிடைக்காமல் இருக்கிறது. இதைத்தான் ராஜீவ் குமார் அழிக்க பார்க்கிறார் என்று கூறுகிறார்கள்.
மிக முக்கியம்
இந்த நிலையில் இது தொடர்பான ஆவணங்களை சிபிஐ இன்று தாக்கல் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள். இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர், பாஜகவை சேர்ந்த சிலர் மீது கூட புகார் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த ஆவணங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.