சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை திடீர் தாமதம்.. மே 18ல் வெளியாகிறது
டெல்லி: சிபிஎஸ்இ (CBSE 10th & 12th) பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான, கால அட்டவணை இன்று அறிவிக்கப்பட இருந்த நிலையில், அது தாமதமாகியுள்ளது. நாளை மறுநாள் மே 18ஆம் தேதி, தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, நாடு முழுக்க லாக்டவுன் நடைமுறையில் இருப்பதால், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல், பாதியில், ஒத்தி போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதில் ஜூலை 1-ம் தேதி முதல் 15ம் தேதி வரை சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், விடுபட்ட தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
ஆனால், தேர்வு கால அட்டவணை அறிவிக்கப்படாத நிலையில், இன்று மாலை அது வெளியாகும் என்று ரமேஷ் போக்ரியால் இன்று காலை வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருந்தார். இதையடுத்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த பட்டியலை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

மாலையில் மத்திய அமைச்சர், ஒரு டுவிட்டர் பதிவு வெளியிட்டார். அதில், சில தொழில்நுட்ப விவகாரங்களுக்காக கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை மே பதினெட்டாம் தேதி திங்கள்கிழமை வெளியிடப்படும். தடங்கலுக்கு வருந்துகிறோம், என்று தெரிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு, முறையே, தலா 25 தேர்வுகள் நடத்தப்பட தேவையுள்ளது. அதேநேரம், ஏற்கனவே நடைபெற்று முடிந்த இந்த வகுப்புகளுக்கான தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி துவங்கி விட்டது. மிச்சமுள்ள பாடங்களுக்கான தேர்வுகள் நிறைவடைந்த பிறகு மொத்தமாக தேர்வு முடிவுகள் வெளியாகும்.












Click it and Unblock the Notifications