கொரோனா தடுப்பூசிக்கு.. ஒட்டுமொத்த உலகமே இந்தியாவை தான் நம்பியுள்ளது.. டாக்டர் அரோரா பளீச் பேட்டி
டெல்லி: தற்போது பரிசோதனையில் உள்ள பயோலாஜிக்கல் இ தடுப்பூசி 90% தடுப்பாற்றல் உடையதாக உள்ளதாகவும் கொரோனாவுக்கு எதிரான போரில் அது உண்மையான ஒரு கேம் சேஞ்சராக இருக்கும் என்றும் அரசின் தடுப்பூசி வல்லுநர் குழு தலைவர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது கொரோனா 2ஆம் அலை மெல்லக் குறைந்து வருகிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும், பற்றாக்குறை காரணமாகத் தடுப்பூசி பணிகளை விரைவாக மேற்கொள்ள முடியவில்லை. இதனால் தற்போது சோதனையில் உள்ள தடுப்பூசிகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
புதிய தடுப்பூசிகள்
குறிப்பாக அமெரிக்காவில் நோவாக்ஸ் கொரோனா தடுப்பூசி 90% வரை தடுப்பாற்றல் கொண்டது என்பது மருத்துவ சோதனைகளில் தெரியவந்தது. இந்தத் தடுப்பூசியை இந்தியாவில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்யவுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 100 கோடி தடுப்பூசி டோஸ்களை உற்பத்தி செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவிலும் நோவாக்ஸ் தடுப்பூசி போலவே இருக்கும் பயோலாஜிக்கல் இ நிறுவனத்தின் தடுப்பூசி தற்போது சோதனையில் உள்ளது.
பயோலாஜிக்கல் இ தடுப்பூசி
இந்நிலையில் பயோலாஜிக்கல் இ நிறுவனத்தின் தடுப்பூசி குறித்து மத்திய அரசின் வல்லுநர் குழு தலைவர் என்.கே. அரோரா கூறுகையில், "கோர்பேவாக்ஸ் (Corbevax) என்று அழைக்கப்படும் பயோலாஜிக்கல் இ நிறுவனத்தின் தடுப்பூசி 90% செயல்திறனைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்தத் தடுப்பூசி குறித்து வெளியாகும் தகவல்கள் உற்சாகம் அளிக்கும் வகையில் உள்ளது. ஏனென்றால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மற்ற நோய்களுக்கு உருவாக்கப்பட்ட அனைத்தும் தடுப்பூசிகள் வெற்றிகரமாக இருந்துள்ளன.
மிகவும் பாதுகாப்பானவை
இந்தத் தொழில்நுட்பம் அனைத்து வயதினருக்கும் மிகவும் பாதுகாப்பானவை. மேலும், இவை மிக உயர்ந்த செயல்திறனை அளிக்கும். விரைவில் மூன்றாம்கட்ட மருத்துவ பரிசோதனை தொடங்கப்பட்டு, இந்தத் தடுப்பூசி வரும் அக்டோபர் முதல் பயன்பாட்டிற்கு வரும் என நினைக்கிறேன்" என்றார். ஹைதராபாத்தை சேர்ந்த பயோலாஜிக்கல் இ நிறுவனம் உருவாக்கியுள்ள இந்தத் தடுப்பூசி மிகக் குறைந்த விலையாக ரூபாய் 250க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்த விலை தடுப்பூசிகள்
இது தவிர மேலும் இரண்டு தடுப்பூசிகளும் தற்போது 2ஆம் கட்ட மருத்துவ சோதனையில் உள்ளன. அவையும் பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில் எதிர்காலத்தில் ஒட்டுமொத்த உலகமே குறைந்த விலை கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்தியாவை நம்பி இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் டாக்டர் அரோரா தெரிவித்தார்.
ஒட்டுமொத்த உலகம்
மேலும் அவர் கூறுகையில், "பல நாடுகளும் இந்தியாவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன், குறிப்பாகக் குறைந்த வருமானம் கொண்ட நாடுகள். இன்றைய சூழ்நிலையில், தடுப்பூசிகளை வாங்குவது என்பது ஆயுதங்களை வாங்குவதைவிடக் கடினமாக உள்ளது. எனவே, குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் தடுப்பூசிக்கு இந்தியாவை எதிர்நோக்கியுள்ளன" என்றார்.