நிவர் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு சனிக்கிழமை தமிழகம் வருகிறது
டெல்லி: நிவர் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு சனிக்கிழமை தமிழகத்திற்கு வருகிறது.
இயற்கை பேரிடர்கள் ஏதாவது ஏற்பட்டால் அந்தந்த மாநிலத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கும். முன்னதாக பேரிடரால் ஏற்பட்டுள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு அவற்றை கணக்கிட்டு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
இதற்காக மத்திய அரசின் உயர் அதிகாரிகளை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு மத்திய அரசு அனுப்பி வைக்கும். இந்த நிலையில் கடந்த வாரம் தமிழகம் மற்றும் புதுவையில் நிவர் புயல் தாக்கியது.

இதனால் நெல், கடலை, முந்திரி உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. அது போல் வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. பல கால்நடைகள் இறந்ததோடு வீடுகளும் சேதமடைந்தன.
இவற்றுக்கு இழப்பீட்டை வழங்கும்படி மக்கள் பலர் கோரிக்கை விடுத்தனர். நிவாரண உதவிகளை வழங்குவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்திற்கு மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, புதுவை நாராயணசாமியை அழைத்து உறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில் நிவர் புயல் சேதங்களை கணக்கிட மத்திய அரசு குழு ஒன்று தமிழகத்திற்கு இன்றைய தினம் வருவதாக இருந்தது. ஆனால் தற்போது வரும் சனிக்கிழமை அந்த குழு தமிழகம் வருகிறது.
இந்த குழுவில் டெல்லியில் உள்ள மத்திய வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர், மத்திய நிதித்துறை செயலாளர் (செலவினங்கள்), மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை செயலாளர், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை செயலாளர், மத்திய மின்சார துறை செயலாளர், மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை செயலாளர், மத்திய மீன்வளத்துறை செயலாளர், மத்திய நீர்வளத்துறை செயலாளர் ஆகிய 7 பேர் இடம் பெற்று உள்ளனர்.
இந்த குழுவினர் சேதத்தை மதிப்பீடு செய்து பின்னர் அதுகுறித்த விவரங்களை மத்திய அரசிற்கு வழங்குவார்கள். தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வரும் அவர்கள் முதலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலாளர் கே சண்முகம் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்துவார்கள்.












Click it and Unblock the Notifications