2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி... மத்திய நிபுணர் குழு ஒப்புதல்..!
டெல்லி: 2 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய நிபுணர் குழு ஒரு வழியாக ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் விரைவில் 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.
ஹைதராபாத்தில் இயங்கி வரும் பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் குழந்தைகளுக்கு செலுத்தப்படும் கோவேக்சின் தடுப்பூசி குறித்து, 3 கட்ட ஆய்வு நடத்தப்பட்டு அந்த ஆய்வறிக்கையை இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு கழகத்திடம் சமர்பிக்கப்பட்டது.

பாரத் பயோடெக்
பாரத் பயோடெக் நிறுவனம் வழங்கிய ஆய்வுத் தரவுகள் குறித்து விரிவாக ஆலோசித்து, அலசி ஆராய்ந்து இப்போது 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவேக்சின் தடுப்பூசியை செலுத்த ஒப்புதல் அளித்துள்ளது மத்திய நிபுணர் குழு. இது கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. அவசரக் கால பயன்பாட்டுக்காக சிறார் கோவேக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத்திருப்பதால், பெற்றோர்கள் மத்தியில் இந்தச் செய்தி மகிழ்ச்சியையும், நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பூசி பணிகள்
இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. முதலில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசியில் முன்னுரிமை என ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பணி, நாளடைவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதியளிக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கண்டுபிடிப்பான கோவிஷீல்டு தடுப்பூசியும், இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசியும் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை ஒரு சில குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே செலுத்திக்கொண்டுள்ளனர்.

ஆலோசனை
பெரியவர்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசியை போல் குழந்தைகளுக்கும், சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு பல்வேறு கட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியிருக்கிறது. அதன் அடிப்படையில் உரிய முறையில் இந்த ஒப்புதல் தரப்பட்டிருக்கிறது. இதனிடையே 12 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு ஜைகோவ்-டி என்ற கொரோனா தடுப்பூசிக்கு கடந்த மாதம் மத்திய நிபுணர் குழுஅனுமதி வழங்கியிருந்தது திரும்பிப் பார்க்கத் தக்கது. இது ஜைடஸ் கேடில்லா மருந்து நிறுவனத்தின் முதல் டி.என்.ஏ. தடுப்பூசியாகும்.

மத்திய அரசு
மத்திய நிபுணர் குழுவின் ஒப்புதலை தொடர்ந்து, குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் விரைவில் சந்தைப்படுத்தும் எனத் தெரிகிறது. 2 வயது முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கும், சிறார்களுக்கும் தயாரிக்கப்பட்டுள்ள கோவேக்சின் தடுப்பூசியின் விலை குறித்த எந்த விவரமும் வெளியாகவில்லை. இதனிடையே இந்தாண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்த இலக்கு நிர்ணயித்து மத்திய சுகாதாரத்துறை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில்
இந்தியாவில் சிறார்களுக்கான தடுப்பூசிக்கு இன்று தான் அனுமதியே கிடைத்திருக்கும் நிலையில், அமெரிக்காவில் தான் உலகிலேயே முதல்முறையாக சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த மே மாதம் 14-ம் தேதி முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. கடற்கரை, பள்ளிகள், என சிறார்கள் கூடும் இடங்களில் இலவசமாகவே அவர்களுக்கு அமெரிக்க அரசு தடுப்பூசி செலுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications