நிலத்தடி நீருக்கு வரி இல்லை.. விவசாயிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள் - மத்திய அரசு திட்டவட்டம்
டெல்லி: இந்தியா முழுவதும் வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முறை மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசின் நீர்வளத் துறை செயல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது விவாதத்துக்குள்ளாகியது. இந்நிலையில், விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்கு வரி விதிக்கப்படுவதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முறை மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது சர்ச்சைக்கு உள்ளானது. நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தின்படி, மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் நீர் பயன்பாட்டாளர்கள் அமைப்புகளின் மூலம் நிலத்தடி நீர் மையப்படுத்தப்பட்ட பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.

அந்த நீரை அழுத்தத்தை பயன்படுத்தி உழவர்களின் வேளாண் பயன்பாட்டுக்காக அனுப்பும் வசதிகளும் செய்யப்பட்டிருக்கும். அங்கிருந்து உழவர்கள் தங்களுக்குத் தேவையான நிலத்தடி நீரை பெறலாம். எவ்வளவு நீரை உழவர்கள் பெறுகிறார்களோ, அவ்வளவு நீருக்கு வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தை சோதனை அடிப்படையில் பல மாநிலங்களில் 22 இடங்களில் செயல்படுத்த இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஏற்கனவே விளைபொருள்களுக்கு போதிய விலை கிடைக்காதது, உரங்களின் விலை உயர்வு, சந்தை வசதிகள் இல்லாதது என பல்வேறு பிரச்சனைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதித்து விவசாயிகளுக்கு மேலும் சிரமத்துக்கு ஆளாக்க கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். விவசாயிகள் தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வேளாண்மைக்காகப் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படும் என்ற தகவல் உண்மையல்ல என்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) உண்மை சரிபார்ப்பு அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் நீர் என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை வெளியிட்ட பிஐபி, விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நீருக்கு வரி விதிக்கப்படும் என்ற தகவல் உண்மையல்ல என்று தெரிவித்துள்ளது. விவசாயிகளிடையே இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தகவல்களை வெளியிட வேண்டாம் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications