மத்திய அரசு புதிதாக சூப்பர் திட்டம்.. நாடு முழுவதும் ஆதார் போன்று விவசாயிகளுக்கு அடையாள அட்டை
டெல்லி: மத்திய அரசு ஆதார் திட்டத்தை போல், அடுத்ததாக விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செயதிருக்கிறது. இந்த திட்டத்தின்படி வரும் மார்ச் மாதத்துக்குள் 5 கோடி விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அட்டை வைத்துள்ள விவசாயிகளுக்கு பல்வேறு சலுகை திட்டங்களை செயல்படுத்த போகிறதாம்.
இந்தியாவை பொறுத்தவரை விவசாய பூமியாகும். இங்கு பெரும்பாலான மக்கள் விவசாயத்தையே ஜீவாதாரமாக கொண்டவர்கள். ஆனால் விவசாயம் இந்தியாவில் லாபகரமான தொழிலாக இல்லை. விவசாய தொழிலில் ஈடுபட்டவர்கள் அதை விட்டு வெளியேறும் நிலை பல மாநிலங்களில் ஏற்பட்டு வருகிறது.

பலரும் கடன் வாங்கி விவசாயம் செய்தும், லாபம் பெற முடியவில்லை.. விவசாயத்தை பொறுத்தவரை லாபம் என்பது மிகக்குறைவாக இருக்கிறது. இந்த சூழலில் விவசாயத்தில் ஈடுபட்டு லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காக பயிர்க்காப்பீடு திட்டம், கடன் திட்டங்கள், விவசாய பொருட்கள், உரம், மருந்துகள் உள்ளிட்ட இடுபொருட்கள் வாங்க மானியங்கள் உள்பட பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அளித்து வருகிறது.
இந்த சூழலில் விவசாயிகளுக்கு தேவையான மானியங்கள், வளர்ச்சி திட்டங்கள், விவசாயிகள் பயிர் சாகுபடி குறித்த தகவல்கள் எல்லாவற்றையும் டிஜிட்டல் மயமாக்கி வருகிறது மத்திய அரசு. இந்நிலையில் டெல்லியில், வேளாண் தொழில்நுட்ப உச்சி மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட மத்திய வேளாண் துறை செயலாளர் தேவேஷ் சதுர்வேதி கூறும் போது, கடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகள் நலனுக்காக ரூ.2 ஆயிரத்து 817 கோடி ஒதுக்கீட்டில் டிஜிட்டல் வேளாண்மை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
விவசாயத்துறை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் விவசாயிகளை பதிவு செய்யும் பணியை தொடங்க இருக்கிறோம். ஏனெனில் தற்போதைய நிலையில், விவசாயிகள் ஏதேனும் வேளாண் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும்போது ஒவ்வொரு தடவையும் அவர் விவசாயி தானா, அவர் என்ன விவசாயம் செய்கிறார் என்பதை சரிபார்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. இதற்கு கணிசமான நேரம் மற்றும் செலவு ஏற்படுகிறது. இந்த சரிபார்ப்பு முறை சில அசவுகரியங்களையும் ஏற்படுத்துகிறது. இதற்கு தீர்வு காண விவசாயிகள் பதிவேடு ஒன்றை உருவாக்க உள்ளோம்.
இப்போது மாநில அரசுகள் அளித்த விவசாய நிலங்கள், பயிர் சாகுபடி குறித்த தரவுகள் மட்டுமே மத்திய அரசிடம் உள்ளன. விவசாயிகளை பற்றி தனிப்பட்ட தரவுகள் மத்திய அரசிடம் இல்லை. அந்த குறையை இப்புதிய திட்டம் தீர்க்க போகிறது. நாடு முழுவதும் விவசாயிகள் பெயர்களை பதிவு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை விரைவில் வெளியிடப் போகிறோம். அக்டோபர் மாதம், பதிவு செய்யும் பணி தொடங்கும். இதற்காக முகாம்கள் நாடு முழுவதும் நடத்தப்படும். மார்ச் மாதத்துக்குள் 5 கோடி விவசாயிகளின் பெயர்களை பதிவு செய்ய இலக்கு நிர்ணயித்திருக்கிறோம்.
இந்த திட்டப்படி ஆதார் போல், விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்கப்படும். அதன் மூலம் அவர்கள் பல்வேறு வேளாண் திட்டங்களை எளிதாக பெற முடியும். விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் அட்டை உள்ளிட்ட திட்டங்களை பெற முடியும். அரசின் கொள்கை ரீதியாக விவசாயிளுக்காக முடிவு எடுக்கவும், விவசாயிகள் தேவைகளுக்காக திட்டமிடவும் இந்த தகவல்கள் உதவியாக இருக்கும்" இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாட்டை பொறுத்தவரை, விவசாயிகளை அடையாளம் காண்பதற்காக மாநில அரசு சார்பில் முன்பு உழவர் அட்டை வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட அதே பாணியில் இப்போது விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications