வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள போறீங்களா? வந்தது புதிய கட்டுப்பாடு
டெல்லி: வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவோருக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.
திருமணமானவர்கள் குழந்தை பிறப்பை தள்ளி போடுவதால் நிறைய பிரச்சினைகள் எழுகின்றன. இதனால் அவர்களுக்கு குழந்தை பேறுவும் காலதாமதமாகிறது. சிலருக்கு கிடைக்காமல் கூட போகிறது.

இதனால்தான் காலத்தே பயிர் செய் என பெரியவர்கள் சொல்கிறார்கள். வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கம், மரபணு பிரச்சினை உள்ளிட்டவையும் குழந்தை பிறப்பிற்கு பிரச்சினைகளாக வருகின்றன.
இவை எல்லாமே சரியாக இருந்தும் கூட சில தம்பதிக்கு குழந்தை பிறப்பு என்பது தள்ளி கொண்டே போகும். அவர்களும் பல ஆண்டுகளுக்கு சில சிகிச்சை முறைகளை மேற்கொள்வர். ஆனால் அதுவும் கை கூடாது. இதனால் ஒரு கட்டத்தில் இந்த தம்பதிக்கு வாடகை முறையில் மட்டுமே குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என மருத்துவர்கள் சான்றளிப்பர்.
அப்படிப்பட்ட தம்பதிகள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள சட்டமும் அனுமதிக்கிறது. ஆனால் சில விதிமுறைகளையும் வகுத்துள்ளது. இந்த விதிமுறைகள் எல்லாம் 2022 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டதாகும். இந்த நிலையில் அந்த விதிகளில் தற்போது மத்திய அரசு புதிய திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.
இதை மத்திய அரசு அறிவிப்பாகவும் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பாணையில் மத்திய சுகாதார நலத் துறை கூறியிருப்பதாவது: வாடகைத் தாய் முறையில் பிறக்கும் குழந்தைக்கு அதன் தந்தையின் உயிரணுக்களோ அல்லது தாயின் கருமுட்டையையோ கொண்டிருக்க வேண்டும்.
அந்த நிபந்தனையுடன்தான் வாடகைத்தாய் முறையை பயன்படுத்த அனுமதி கொடுக்கப்படும். அதாவது கணவன், மனைவி இருவருக்குமே குழந்தையை பெற்றுக் கொள்ள முடியாதபடி குறைபாடு இருந்தால் அவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் முறையை பயன்படுத்திக் கொள்ள முடியாது.
யாராவது ஒருவருக்கு மட்டுமே குறைபாடு இருந்தால்தான் வாடகைத் தாய் முறைக்கு செல்ல முடியும். இதற்காக யாருக்கு குறைபாடு இருக்கிறது என்பதற்கு மாவட்ட மருத்துவ வாரியம் சான்றிளிக்க வேண்டும். அதன் பிறகுதான் உயிரணுக்களையோ கரு முட்டையையோ தானமாக பெற முடியும்.
ஒரு வேளை பெண் ஒருவர் விதவையாக இருந்தாலோ அல்லது விவாகரத்து ஆனவராக இருந்தாலோ அவரது சொந்த கருமுட்டையையும் தானமாக பெற்ற உயிரணுக்களையும் பயன்படுத்தித் தான் வாடகைத்தாய் முறைக்கு செல்ல முடியும் என அந்த அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வாடகைத் தாய் முறையில் ஏற்கெனவே இருந்த விதிகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வாடகைத் தாயாக வந்து குழந்தை பெற்று கொடுக்கும் பெண், குழந்தை இல்லாத தம்பதிக்கு உறவுக்கார பெண்ணாக இருத்தல் வேண்டும். அந்த பெண்ணுக்கு திருமணமாகி ஒரு குழந்தையாவது இருத்தல் வேண்டும். திருமணமாகாத பெண்கள் வாடகைத்தாயாக இருத்தல் கூடாது.
வாடகைத் தாய் முறை மூலம் அணுகும் தம்பதிக்கும் திருமணமாகியிருக்க வேண்டும். லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்போர் நிச்சயம் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி இல்லை. அது போல் LGBTQ பிரிவினரும், ஓரின சேர்க்கையாளர்கள் வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. இந்த முக்கிய விதியைத்தான் இந்த பிரிவினர் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.
வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொடுக்கும் பெண் தனது கர்ப்பப்பையை மட்டுமே கொடுக்கிறார். அதில் தம்பதியின் கருமுட்டையும் விந்தணுவும் செலுத்தப்பட்டு கருவாகிறது. ஒரு வேளை பெண்ணுக்கு கருமுட்டையே இல்லாத நிலையில் கருமுட்டையை தானம் பெற்று அதை கணவரின் விந்தணுவுடன் சேர்த்து வாடகைத்தாயின் உடலில் செலுத்தப்படும். மற்றபடி எந்த இடத்திலும் வாடகைத்தாயின் கரு முட்டை பயன்படுத்தப்படுவதில்லை.












Click it and Unblock the Notifications