ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலையில் தலையிட முடியாது- மத்திய அரசு
Recommended Video

டெல்லி: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலையில் மத்திய அரசு தலையிட முடியாது என்று உள்துறை அமைச்சகம் ஆர்டிஐ மூலம் பதில் அளித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் வந்த போது படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், நளினி, சாந்தன், ஜெயக்குமார், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.
தண்டனை காலம் முடிந்தும் சிறையில் இருக்கும் இவர்களை விடுவிக்க வேண்டும் என அவரது உறவினர்களும் ,தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆளுநருக்கு தீர்மானம்
இதையடுத்து இந்த தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டு 75 நாட்களுக்கு மேல் ஆகியும் ஆளுநர் இன்னும் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் உள்ளார். இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பேரறிவாளன் கடிதம் எழுதினார்.

மாநில அரசின் முடிவு
அதில் குற்ற விசாரணை சட்டத்தின் 432 முதல் 435 வரையான பிரிவுகளின் கீழ், குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக மத்திய அரசு வகுத்துள்ள விதிகளின் நகலை அளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்திய வழக்குகளில், முன்கூட்டியே விடுதலை செய்யும் மாநில அரசின் முடிவை தடுக்கும் மத்திய அரசின் விதிகள் என்னென்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

பதில் அளிக்கவில்லை
இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதில் ஏதும் அளிக்காததால் தகவல் அறியும் ஆணையத்தில் பேரறிவாளன் முறையிட்டார். இதையடுத்து பேரறிவாளன் கேட்டுள்ள தகவல்கள் அனைத்தும் 3 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய தகவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

விவரங்கள் இல்லை
இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பேரறிவாளனுக்கு கடிதம் வந்தது. அதில் குற்றவாளிகளுக்கான தண்டனையை குறைக்கவோ தண்டனையை குறைப்பதிலிருந்து மாநில அரசை தடுக்கும் வகையிலோ எந்த விதியும் இல்லை. 15 ஆண்டுகளாக தண்டனைக் குறைப்பு செய்யப்பட்ட விவரங்கள் இல்லை. அது கிடைத்தவுடன் விரைவில் அனுப்பப்படும் என குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் 7 தமிழர்களை விடுதலை செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது என்பது தெரியவருகிறது.












Click it and Unblock the Notifications