"தேச ஒற்றுமைக்கு பாதிப்பு!" அடுத்தது பொது சிவில் சட்டம்தான்! சத்தமின்றி வேலையை ஆரம்பித்த மத்திய அரசு
டெல்லி: மத்திய பாஜக அரசு அடுத்தகட்டமாக யுசிசி எனப்படும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர முதற்கட்ட நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளது.
மத்திய பாஜக அரசு 2019 தேர்தல் சமயத்தில் வழங்கிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. சிறப்புச் சட்டம் ரத்து, சிஏஏ, ராமர் கோயில் என்று ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது.
பாஜக தேர்தல் சமயத்தில் அளித்த மற்றொரு முக்கிய வாக்குறுதி பொது சிவில் சட்டம். இந்நிலையில், இதற்கான நடவடிக்கையையும் பாஜக இப்போது அமைதியாகத் தொடங்கி உள்ளது.

சிவில் சட்டம்
இந்தியாவில் குற்றவியல் நடவடிக்கைக்கான சட்டம் ஒரே மாதிரியாக இருக்கிறது. அதேநேரம் சிவில் சட்டங்களைப் பொறுத்தவரை இந்தியாவில் பல மதங்களுக்குப் பல சிவில் சட்டங்கள் உள்ளன. இப்படி உள்ள தனிநபர் சட்டத்தினை நீக்கி, அதற்குப் பதிலாக அனைத்து தரப்பு மக்களும் எளிதாகக் கடைப்பிடிக்கும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று பாஜக உள்ளிட்டோர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மத்திய அரசு பதில்
இதற்கிடையே பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர முதல் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு முதல் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது. நாட்டிற்கு ஏன் பொது சிவில் சட்டம் தேவை என்பது குறித்து சில கருத்துகளையும் மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளது. இப்படி நாட்டில் பல்வேறு சட்டங்கள் இருப்பது தேசிய ஒற்றுமைக்கு இடையூறாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

வழக்கு
வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்து இருந்தார். அதில் விவாகரத்து, தத்தெடுப்பு, வாரிசுரிமை, பராமரிப்பு, திருமண வயது, ஜீவனாம்சம் உள்ளிட்ட தனி நபர் சிவில் விவகாரங்களில் அனைத்து மதம் மற்றும் பாலினங்களுக்கு ஏற்ப சட்டத்தை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அஷ்வினி உபாத்யாய் தனது மனுவில் கூறி இருந்தார்.

தேச ஒற்றுமைக்கு இடையூறு
பொது சிவில் சட்டத்தை உருவாக்குவது தொடர்பாக மத்திய அரசு விரிவான பதிலை அளிக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கில் தான் மத்திய அரசு இப்போது பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்து உள்ளது. அதில் தான் நாட்டில் இப்படி பல்வேறு சட்டங்கள் இருப்பது தேசிய ஒற்றுமைக்கு இடையூறாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றம்
இந்தியாவில் இப்போது தனிநபர் சட்டம் என்பது மக்களின் நம்பிக்கை மற்றும் மதங்களின் அடிப்படையில் உள்ளன. பெரும்பாலான மதங்கள் வெவ்வேறு தனிப்பட்ட சிவில் சட்டங்களைக் கொண்டு உள்ளன. முன்னதாக, நாட்டில் பொது சிவில் சட்டத்தை (யுசிசி) அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

பொது சிவில் சட்டம்
பொது சிவில் சட்டம் என்பது அரசியலமைப்பின் 44வது பிரிவின் கீழ் வருகிறது. மதம், பாலினம் அல்லது ஜாதி ஆகியவற்றை கடந்து தனிநபர் சட்டங்களை அறிமுகப்படுத்த இந்தச் சட்டம் முன்மொழிகிறது. திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு போன்ற தனிப்பட்ட விஷயங்களுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டம் வேண்டும் என்றே இதில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications