கிராமப்புறங்களில் 30 படுக்கைகளுடன் சிகிச்சை மையங்கள்.. 3 அடுக்கு செயல்திட்டம்- மத்திய அரசு உத்தரவு
டெல்லி: கிராமங்கள், புறநகர் பகுதிகளில் ஆக்சிஜன் சிலிண்டர் வசதிகளுடன் கூடிய 30 படுக்கைகள் கொண்ட கொரோனோ சிகிச்சை மையங்கள் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் உக்கிரமாக பரவி வருகிறது. கொரோனா 2-வது அலையானது கிராமங்கள், மலைகளில் வாழும் பழங்குடி மக்களையும் தாக்கி வருகிறது.
இதனையடுத்து கிராமப்புறங்கள், புறநகர்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசின் வழிகாட்டுதல்
கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள், சமுதாய சுகாதார மையங்கள், மாவட்ட துணை மருத்துவமனைகள் ஆகிய 3 கட்டமைப்புகளை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட வேண்டும். இந்த 3 அடுக்கு கொரோனா செயல் திட்டத்தின் கீழ் 2 ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் கூடிய 30 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

கட்டாயம் இருக்க வேண்டியவை
கொரோனா தொற்று அதிகரித்து இருந்தால் படுக்கைகளின் எண்ணிக்கையையும் கூடுதலாக்க வேண்டும். பொது சுகாதார மையங்களில் கொரோனாவை கண்டுபிடிக்கக் கூடிய பரிசோதனைக் கருவிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.

தனித்தனியாக சிகிச்சை
கொரோனா அறிகுறி உள்ளவர்கள், கொரோனா தொற்று பாதித்தவர்கள் என தனித்தனியாக பிரித்து சிகிச்சை தர வேண்டும். கிராமங்களில் காய்ச்சல், சுவாச சிக்கல் உள்ளவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். லேசான அறிகுறிகள் கொண்டவர்களை இந்த சிகிச்சை மையங்களில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். பின்னர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

24 மணிநேரமும் தயார் நிலை
ஆக்சி மீட்டர், தெர்மா மீட்டர் ஆகியவற்றை ஒவ்வொரு முறை பயன்படுத்திய பின்னர் முறையாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். கிராமப்புற, புறநகர் கொரோனா சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் கொண்ட ஆம்புலன்ஸ் 24 மணிநேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

எவற்றையெல்லாம் மாற்றலாம்?
கிராமங்களில் பள்ளிகூடங்கள், பஞ்சாயத்து கட்டிடங்கள், சமுதாய நல கூடங்களை சுகாதார வசதிகளுடனான புதிய கொரோனா சிகிச்சை மையங்களாக உருவாக்கலாம். இந்த சிகிச்சை மையங்கள் சுகாதார மையங்கள் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் இருக்க வேண்டும். கொரோனா தொற்று அறிகுறியுடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான மருந்துகளை சுகாதார மையங்கள் வழங்க வேண்டும்.

கண்காணிப்பு, தகவல் தொடர்பு
இப்படி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை தன்னார்வலர்கள் மூலம் கண்காணிப்பதுடன் அவர்களுக்கு வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக யாரை தொடர்பு கொள்வது என்பதை தெரியப்படுத்த வேண்டும். கொரோனா பாதித்தவர்களின் ஆக்சிஜன் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications