ஜிஎஸ்டி நிலுவைதொகை விடுவிப்பு.. தமிழகத்தை விட மகாராஷ்டிரா, கர்நாடகா, உபிக்கு அதிகம்!எவ்வளவு? விபரம்
டெல்லி: மத்திய அரசு சார்பில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்களுக்கு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவை தொகை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழக அரசுக்கு ரூ.1,188 கோடி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் பாஜக ஆட்சியில் உள்ள மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தர பிரதேசத்துக்கு தமிழகத்தை விட அதிகம் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலில் உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டுக்காக மத்திய அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு சரியாக விடுவிப்பது இல்லை என பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசை குற்றம்சாட்டி வருகின்றன.

நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை
இந்நிலையில் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மத்திய பட்ஜெட்டு தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் ஒவ்வொரு மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்திலும் கூட மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகைகளை உடனே வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

நிலுவை தொகை விடுவிப்பு
இந்நிலையில் தான் தற்போது 3 மாதத்துக்கான ஜிஎஸ்டி நிலுவை தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதன்படி கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்துக்கு மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்காக மொத்தம் ரூ.17,000 கோடி ஜிஎஸ்டி நிலுவை தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு எவ்வளவு?
இதில் தமிழகத்துக்கு ரூ.1188 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரூ.2081 கோடி ஜிஎஸ்டி இஒப்பீடு தொகையாக வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவுக்கு ரூ.1915 கோடியும், உத்தர பிரதேசத்துக்கு ரூ.1,202 கோடியும், டெல்லிக்கு ரூ.1200 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் எவ்வளவு?
இதன்மூலம் 2022-2023ம் நிதியாண்டில் இதுவரை மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்காக ரூ.1,15,662 கோடி ஜிஎஸ்டி நிலுவை தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இதில் அக்டோபர் வரை மொத்த ஜிஎஸ்டி செஸ் வரி வசூல் என்பது ரூ.72,147 கோடியாக மட்டுமே உள்ளது. இருப்பினும் கூட ரூ.43,515 கோடியை மத்திய அரசு தனது சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து மாநிலங்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications