மாநிலங்களின் திட்டக் குழுவுக்கு வேட்டு வைக்கும் மத்திய பாஜக அரசு- நிதி ஆயோக் அமைப்புகள் திணிப்பு?
டெல்லி: மாநிலங்களின் திட்டக் குழுக்களை கலைத்துவிட்டு நிதி ஆயோக் மாதிரியான அமைப்பு ஒன்றை மாநிலங்கள் மீது மத்திய அரசு திணிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மத்திய பாஜக அரசின் இந்த முயற்சிக்கு கேரளா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக வென்று ஆட்சி அமைத்தது. அப்போது முதல் முறையாக சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, திட்டக் குழுக்களை கலைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

மத்திய திட்டக் குழு என்பது 1950களில் உருவாக்கப்பட்டது. ஐந்தாண்டுத் திட்டங்களை இந்த திட்டக் குழு செயல்படுத்தி வந்தது. ஆனால் இனி திட்டக் குழு என்பது தேவை இல்லை; அதற்கு பதிலாக புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்றார் பிரதமர் மோடி.
இதனைத் தொடர்ந்து திட்டக் குழு என்ற அமைப்பு முறையே கலைக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக நிதி ஆயோக் என்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. நிதி ஆயோக் தொடர்பாக பல்வேறு மாநிலங்கள் அதிருப்தி தெரிவித்தும் வருகின்றன.
இன்னொரு பக்கம், மாநிலங்கள் தாங்களவே திட்டக் குழு ஒன்றை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் மாநில வளர்ச்சிக்கான திட்டக் குழுவை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கி இருந்தார். இந்த மாநில திட்டக் குழு முதல்வரின் தலைமையின்கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு, மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது. மாநில திட்டக் குழு துணைத் தலைவரின் கீழ் வளர்ச்சி சார்ந்த முக்கிய துறைகளின் வல்லுநர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது மாநில திட்டக் குழு - மாநில வளர்ச்சிக்கான திட்டக் குழுவின் தலைவராக பொருளாதாரப் பேராசிரியர் முனைவர் ஜெயரஞ்சன் இருந்து வருகிறார். அவரது நியமனம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்போது மாநிலங்கள் அனைத்திலும் உள்ள திட்டக் குழுவை மத்திய பாஜக அரசு கலைக்கும் முடிவில் உள்ளது. இதற்கும் மாற்றாக நிதி ஆயோக் பாணியிலான ஒரு அமைப்பை திணிக்க இருக்கிறது. இதற்கு கேரளா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதர எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் இம்முயற்சியை எதிர்க்கும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications