"கலவரம் வெடிக்கும்! தீவிரவாதிகள் இறங்கலாம்.." மாநிலங்களுக்கு ஹைஅலர்ட் எச்சரிக்கை கொடுத்த மத்திய அரசு
டெல்லி: ஈரான் இஸ்ரேல் இடையே வெடித்துள்ள போர் இப்போது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பாதிப்புகள் சர்வதேச அளவில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. போராட்டங்களால் வன்முறை வெடிக்கலாம் என்பதால் உச்சபட்ச அலர்ட் நிலையில் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரான்-இஸ்ரேல் பதற்றம் மற்றும் ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் கொலையைத் தொடர்ந்து மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது இந்தியாவில் ஷியா சமூகங்கள் நடத்தும் போராட்டங்களால் இந்தியாவில் வன்முறை வெடிக்கலாம் என்றும் இதனால் உச்சபட்ச அலர்ட் நிலையில் இருக்குமாறு மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எச்சரிக்கை
சர்வதேச நிகழ்வுகள் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பைப் பாதிக்கலாம் என்பதால், பாதுகாப்பு ஏஜென்சிகள் உச்சபட்ச உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஈரான் ஆதரவு மற்றும் எதிர்ப்பு குழுக்கள் செயல்பாடுகள் குறித்துக் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் தூதரகங்களைச் சுற்றிலும் பாதுகாப்பைப் பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஷியா போராளிக் குழுக்கள், பயங்கரவாத அமைப்புகளான ஐஎஸ், அல்கொய்தா போன்றவற்றாலும் அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உள்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த குழுக்கள் இப்போது இருக்கும் பதற்றத்தைப் பயன்படுத்தி நாட்டில் குழப்பங்களைத் தூண்டலாம் என உளவுத்துறை தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஹை அலர்ட்
தூதரகங்களைத் தவிர, முக்கிய சுற்றுலாத் தலங்கள், யூத மற்றும் மேற்கத்திய நிறுவனங்களும் சாத்தியமான இலக்குகளாக உள்ளன. முக்கிய மற்றும் உணர்வுப்பூர்வமான இடங்களில் பாதுகாப்புப் படையினர் குவிப்பை அதிகரிக்க மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், அந்த இடங்களில் உள்ளூர் போலீசார் தீவிர சோதனைகளை நடத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.. ஐஇடி போன்ற வெடிபொருட்களைக் கண்டறியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள்
மேலும், மக்களைத் தூண்டிவிடும் செய்திகள், வதந்திகள் பரவுவதைத் தடுக்க சமூக வலைத்தள கண்காணிப்பிற்கு முக்கியத்துவம் தருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மத நல்லிணக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் உலா வருவதைக் கண்காணித்து, அதில் நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், எதாவது அசம்பாவிதம் நடந்தால் உடனடியாக தடுக்க விரைவு அதிரடிப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருக்க அனைத்து டிஜிபிக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பின்னணி
அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல், சனிக்கிழமை அன்று ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மீது தாக்குதலைத் தொடங்கியது. பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில், அதில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாததால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு 'ஆப்ரேஷன் எபிக் ஃபியூரி' (Operation Epic Fury) என அமெரிக்கா பெயரிட்டது.
தெஹ்ரான் நகரின் பல பகுதிகளிலிருந்து பயங்கரமான குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. குண்டுவெடிப்பு ஏற்பட்ட இடங்களில் இருந்து மக்கள் அச்சமடைந்து ஓடினர். உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் அலுவலகங்களுக்கு அருகிலேயே சனிக்கிழமை தாக்குதல்கள் நடந்தன.
டிரம்ப் அறிவிப்பு
இதைத் தொடர்ந்து, ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். முதலில் கமேனி மரணத்தை ஈரான் மறுத்தாலும் கூட பிறகு, அவர்களும் சீக்கிரமே ஒப்புக்கொண்டனர். மேலும், கமேனி கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் ஈரானும் பதிலடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு உள்ளே வந்துள்ள நிலையில், இது பிராந்திய போராக வெடிக்கும் ஆபத்து உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications