ஆந்திராவில் 3-வது குழந்தை பெற்றால் 30,000 பரிசு.. 4-வது குழந்தைக்கு 40 ஆயிரம்.. சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
அமராவதி: ஆந்திராவில் சரிந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், மூன்றாவது குழந்தை பெற்ற குடும்பங்களுக்கு ரூ.30 ஆயிரமும், நான்காவது குழந்தை பெற்றால் ரூ.40 ஆயிரமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
ஆந்திராவில் பிறப்பு விகிதம் சரிந்து வருவதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சமீப காலமாக கவலை தெரிவித்து வருகிறார். மக்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்டவை வழங்குவது குறித்து சந்திரபாபு நாயுடு பரிசீலித்து வந்தார். இந்த நிலையில்தான் மூன்றாவது மற்றும் நான்காவது குழந்தை பெற்றால் பரிசுத்தொகை திட்டத்தை சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

அதாவது, 3-வது குழந்தை பெற்றால் ரூ.30 ஆயிரமும், 4-வது குழந்தை பெற்றால் ரூ.40 ஆயிரமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். நரசன்னபேட்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-
"நான் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளேன். இதன்படி, பெற்றோர்கள் 3-வது குழந்தை பெற்றால் உடனடியாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். 4-வது குழந்தை பெற்றால் ரூ.40 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும். இது சரியான முடிவு இல்லையா?" என்றார்.
மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கு ஆதரவாக ஒரு காலத்தில் பேசி வந்த சந்திரபாபு நாயுடு, தற்போது பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசி வருகிறார். இரண்டாவது குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்ற திட்டத்தை சந்திரபாபு நாயுடு முன்மொழிந்து இருந்த நிலையில், தற்போது கூடுதலாக இந்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
எனினும், மூன்றாவது குழந்தை பெற்றால் மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அரசு முடிவு செய்து இருப்பதாக ஆந்திர சுகாதாரத்துறை அமைச்சர் சத்ய குமார் யாதவ் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications