என்ன திமிர்! தனது மொபைலை எடுக்க 21 லட்ச லிட்டர் நீரை வீணாக்கிய அரசு அதிகாரி! அதுக்கு ஒரு விளக்கம் வேற
டெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் மொபைல் நீரில் விழுந்துவிட்டது எனச் சொல்லி 21 லட்சம் லிட்டர் நீரை அதிகாரி ஒருவர், நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாட்டில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோடைக் காலங்களில் மக்கள் வெளியே கூட செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் உச்சத்தில் உள்ளது.
இதுபோன்ற நேரங்களில் தான் தண்ணீர் எந்தளவுக்கு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். நீரைப் பார்த்து பார்த்து செலவழிக்க வேண்டிய ஒரு சூழலில் நாம் இருக்கிறோம்.

ஏனென்றால், பருவமழை பொய்து போகும் சம்பவங்கள் நடப்பதும் இப்போது அடிக்கடி நடக்கிறது. சில இடங்கள் ஜீரோ டே எனப்படும் தண்ணீர் இல்லாத நாட்களையும் நோக்கிச் செல்லும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இந்தளவுக்கு நீர் என்பது ரொம்பவே முக்கியமான ஒன்றாக மாறியுள்ள நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு அதிகாரி ஒருவர் அராஜகமாகச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் அரசு அதிகாரி ஒருவர் நீர்த்தேக்கத்தில் விழுந்த தனது விலையுயர்ந்த மொபைலை எடுக்க அங்கிருந்த 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியே இறைத்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலையில், இருந்ததாகவும் தான் உயர் அதிகாரிகளிடம் இருந்து வாய்மொழியாக அனுமதி வாங்கிவிட்டே இதைச் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மொபைல்:
சத்தீஸ்கர் மாநிலம் காங்கேர் மாவட்டத்தில் உள்ள கோயிலிபேடா பிளாக்கில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கே உணவு பாதுகாப்பு அதிகாரியான ராஜேஷ் விஸ்வாஸ் என்பவர் தனது விடுமுறையைக் கழிக்க கெர்கட்டா அணைக்குச் சென்றுள்ளார். அப்போது செல்பி எடுக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக அவரது ஒரு லட்சம் மதிப்பிலான மொபைல் நீரில் விழுந்துவிட்டது.
அந்த நீர்த் தேக்கம் 15 அடி ஆழம் என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து மொபைலை எடுக்க உள்ளூர் மக்களின் உதவியை அவர் கேட்டுள்ளார். அவர்கள் முயன்ற போதிலும், மொபைலை எடுக்க முடியவில்லை. இதையடுத்து அவர் செய்த காரியம் தான் அராஜகத்தின் உச்சம். அதாவது இரண்டு பம்புகள் மூலம் அடுத்த 3 நாட்களுக்கு அங்கே இருந்த 21 லட்சம் லிட்டர் நீரை அவர் வீணாக்கியுள்ளார். இந்த நீர் மூலம் 1,500 ஏக்கர் நிலத்திற்குப் பாசனம் செய்திருக்க முடியும்.

திங்கள்கிழமை முதல் அவர் நீரை வெளியேற்றியுள்ளார். நேற்று தான் அவர் முழுமையாக நீரை வெளியற்றியதாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நீர்ப்பாசனம் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்து இந்த அராஜகத்தை நிறுத்தியுள்ளார். இருப்பினும், அதற்குள் நீர் ஆறு அடிக்குக் குறைந்துவிட்டதாம். சுமார் 21 லட்சம் லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
வினோத விளக்கம்:
இந்த நீர்த் தேக்கத்தில் கோடைக் காலத்தில் கூட 10 அடி ஆழத்திற்கு நீர் இருக்கும் என்றும் இங்குள்ள விலங்குகள் இங்கே தான் நீரைக் குடிக்கும் என்றும் அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர். இது குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரியான ராஜேஷ் விஸ்வாஸ் கூறுகையில், "செல்பி எடுக்கும்போது கையிலிருந்து மொபைல் நழுவி விழுந்தது.. அதிகாரப்பூர்வ தகவல்கள் இருந்ததால் மொபைலை எடுக்க வேண்டி இருந்தது. இங்கே இருந்த உள்ளூர் மக்கள் நீருக்கு அடியே சென்று அதை எடுக்க முயன்றனர். இருப்பினும் அவர்களால் முடியவில்லை.
10 அடிக்கு மேல் நீர் இருந்தால், அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சில அடிகள் ஆழம் குறைவாக இருந்தால் எடுத்துவிடலாம் என்றார்கள். நீரை வெளியேற்றுவதால் எந்த பிரச்சினையும் இல்லை தானா என்று இங்கிருந்த அதிகாரியிடம் கேட்ட பின்னரே இதை ஆரம்பித்தேன்.. அவர் முதலில் நீரை வெளியேற்றுவதால் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்றே குறிப்பிட்டார். அதன் பின்னரே நீரை வெளியேற்றத் தொடங்கினேன்" என்றார்.
தான் 5 அடி ஆழத்திற்கு மட்டுமே நீரை வெளியேற்ற அனுமதி அளித்தாகவும் இருப்பினும், அதைத் தாண்டியும் நீரை எடுத்துள்ளதாக அந்த நீர்வளத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இவ்வளவு கஷ்டப்பட்டு நீரை வெளியேற்றி ஒரு வழியாக மொபைலை எடுத்துவிட்டனர். இருப்பினும், அந்த ஆழத்தில் 3 நாட்கள் இருந்ததால் மொபைல் வேலை செய்யவில்லையாம்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்மந்தப்பட்ட அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றே சத்தீஸ்கர் அமைச்சரும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications