அடுத்து வரும் நிதியமைச்சர் பாவம்.. எச்சரிக்கும் ப.சிதம்பரம்.. அப்படீன்னா??
Recommended Video
டெல்லி: அடுத்து வரும் ஆட்சியில் நிதியமைச்சராக வருபவருக்கு தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இதனால் அடுத்து வரும் ஆட்சி காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் கூட்டணி ஆட்சி என்றாலும் ப.சிதம்பரம் நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளமாட்டாரா என்ற கேள்வி இப்போதே அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

இந்திய பொருளாதாரம் குறித்து எக்கனாமிக் டைம்ஸ் ஊடகத்துக்கு பேட்டியளித்த ப.சிதம்பரம் தற்போது இந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ளது. உற்பத்திக் குறியீடுகளும் முதலீடுகளும் எதிர்மறையாக சென்றுகொண்டிருக்கிறது. அந்நிய நேரடி முதலீடு கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது, எல்லாக் குறியீடுகளும் கீழ் நோக்கியே செல்கின்றன " என்றார். அந்நிய நேரடி முதலீடும் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெகுவாக குறைந்துள்ளது என்றும் கூறினார். இது குறித்து தொடர்ந்து பேசியவர் அடுத்து வரும் நிதியமைச்சருக்கு தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.
தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ப.சிதம்பரம் தற்போது நாங்கள் அமைத்துள்ள கூட்டணி அதாவது தேர்தலுக்கு முன்னர் நாங்கள் அமைத்துள்ள கூட்டணி உறுதியானது. தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி அமைப்பதில் இந்த கூட்டணி மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றவர் தற்போது பாஜக இல்லாத ஆட்சியை கட்சிகள் உணன்ர்ந்துள்ளன.
ஆகவே திரிணமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ஆகிய கட்சிகள் மற்றும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இடங்களில் உள்ள இரு கட்சிகள் ஆகியவை காங்கிரஸ் கூட்டணியில் இணைவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன. புதிய அரசு பாஜக இல்லாத அரசாக அமையவேண்டும் என்பதில் அவர்களும் உறுதியாக உள்ளதாக தெரிவித்த ப.சிதம்பரம் அதனால் அந்த கட்சிகள் தங்களோடு வருவார்கள் என்றும் தாங்களும் அதற்கு தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்தார்.
6 வது கட்ட தேர்தல் முடிவுற்ற நிலையில் குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள அனைத்துத் தொகுதிகளையும் இம்முறை காங்கிரஸ் கட்சிதான் கைப்பற்றும் என்றும் அவர் உறுதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தெலுங்கான முதல்வர் சந்திர சேகர் ராவ் மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநிலத் தலைவர்கள் மற்றும் முதல்வர்களை சந்தித்து வரும் சூழலில் ப.சிதம்பரத்தின் இந்த பேட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அடுத்த நிதியமைச்சர் ப.சிதம்பரம் தான் என்று நம்பப்படும் சூழலில் அடுத்து வரும் நிதியமைச்சருக்கு இவர் வருத்தம் தெரிவிப்பதாக கூறியுள்ளது அரசியல் அரங்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அப்படியென்றால் அடுத்து வரும் அரசு பாஜக அரசுதானா? அல்லது காங்கிரஸ் அரசு அமைத்தாலும் ப.சிதம்பரம் நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள மாட்டாரா? அல்லது காங்கிரஸ் மாநில கட்சிகளுக்கு ஆட்சியமைக்க வழிவிட்டு பின்னால் இருந்து ஆதரவளிக்க உள்ளதா என்று பல்வேறு கேள்விகள் எழுகின்றது.
தேர்தலும் தேர்தல் சார்ந்த பின்னணியில் அரசியலில் ஏற்படும் ஒவ்வொரு நகர்வுகளும் பல்வேறு அர்த்தங்களை ஏற்படுத்துவது என்பது இயல்புதானே. இந்த நிலையில் தெலுங்கான முதல்வர் சந்திர சேகர் ராவ் ஸ்டாலினை சந்தித்து விட்டு சென்ற பின்னர் ஸ்டாலின் ராகுலை "கை" விட்டு விட்டார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதும் நினைவு கூறத்தக்கது.












Click it and Unblock the Notifications