உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித் இன்று ஓய்வு.. சிறப்பு அமா்வு நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு!
டெல்லி: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதி யு.யு.லலித். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி பதவியேற்றாா். அவரின் பணிக் காலம் நாளையுடன் நிறைவடைகிறது.
ஆனால் நவ.8ம் தேதி குருநானக் ஜெயந்தியையொட்டி, உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித் பதவிக்காலத்தின் கடைசி பணி நாளான இன்று, நீதிமன்ற சிறப்பு அமா்வு நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
யுயு லலித் ஓய்வு
இதன் காரணமாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் கடைசி நாளாக இன்று பணியாற்ற உள்ளாா். இதையொட்டி, அவா் தலைமையில் கூடும் சிறப்பு அமா்வின் நடவடிக்கைகள் உச்சநீதிமன்ற வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. பிற்பகல் 2 மணிக்கு கூடும் அந்த அமா்வில், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பெலா எம்.திரிவேதி ஆகியோா் இடம்பெற உள்ளனா்.
இரண்டாவது முறை
இந்த அமர்வு, உச்ச நீதிமன்றத்தின் இணையதளம் மற்றும் 'யு டியூப் சேனல்' ஆகியவற்றில் நேரலையில் ஒளிபரப்பாகிறது. இதற்கு முன்னதாக தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா, 2022 ஆக. 26ல் பணி ஓய்வு பெற்ற நிகழ்வும், நேரலையில் ஒளிபரப்பானது. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரணையை, செப். 27ல் உச்ச நீதிமன்றம் நேரலையில் ஒளிபரப்பியது.
யுயு லலித் பணிகள்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1957ம் ஆண்டு பிறந்தவர் யு.யு.லலித். 1983-ம் ஆண்டு முதல் நீதித்துறையில் பணியாற்றி வருகிறார். தொடக்கத்தில் மும்பையிலும் பின்னர் டெல்லியிலும் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். பின்னர் உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியானார். இவரின் தந்தை மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியவர். சட்ட கல்லூரியில் படிப்பை முடித்த இவர், 1983 முதல் 1985 வரை மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர்.
புதிய தலைமை நீதிபதி யார்?
அதனைத்தொடர்ந்து, 1986 முதல் 1992 வரை அப்போதைய இந்திய அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜியின் வழக்குறிஞர் குழுவில் பணியாற்றினார். இதனிடையே உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை ஏற்கனவே குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நியமனம் செய்துள்ளார். இவர் நாளை மறுநாள் 50வது தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.