பிரதமர் மோடியை எதற்காக நேரில் சந்திக்கிறேன் தெரியுமா? காரணத்தை விளக்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
டெல்லி: செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் கலந்துகொண்டதற்காக நன்றி தெரிவிக்கவும், தமிழக பிரச்சனைகள் பற்றி நினைவூட்டவும் பிரதமர் மோடியை தாம் நேரில் சந்திக்க இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
Recommended Video
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.
மேலும், இன்றிரவே தாம் டெல்லியிலிருந்து சென்னை திரும்பவுள்ள தகவலையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.

செய்தியாளர்கள் சந்திப்பு
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடனான சந்திப்பு தனக்கு மன நிறைவை தந்ததாகவும் புதிதாக பொறுப்பு ஏற்றிருப்பதால் அவரிடம் நீட் தேர்வு விலக்கு உட்பட எந்த கோரிக்கையையும் தாம் முன் வைக்கவில்லை எனவும் தெரிவித்தார். ஜனாதிபதியை மரியாதை நிமித்தமாக அவருக்கு வாழ்த்துச் சொல்லவே சந்தித்ததாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

நன்றி தெரிவிக்க
மேலும், இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை நேரில் சந்திக்கவுள்ள தாம், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் கலந்துகொண்டதற்காக நன்றி தெரிவிக்க இருப்பதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நீட் தேர்வு விலக்கு, புதிய கல்விக் கொள்கை, காவிரி, மேககாது அணை பிரச்சனைகள் பற்றி பிரதமரிடம் நினைவூட்ட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். குறிப்பாக இந்த 2 காரணங்களுக்காக தான் பிரதமரை தாம் சந்திக்கவிருப்பதை மிகத் திட்டவட்டமாக தெரிவித்தார் முதல்வர்.

முதல்வர் டென்ஷன்
லேப்டாப் திட்டம் பற்றி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது டென்ஷனான முதலமைச்சர் ஸ்டாலின், அரசியலுக்காக கேட்கிற கேள்விகளுக்கு எல்லாம் இந்த நேரத்தில் பதில் சொல்ல முடியாது என சீறிவிட்டு புறப்பட்டார். குடியரசுத் தலைவரை முதலமைச்சர்கள் சந்தித்து பேசுவது வழக்கமான ஒன்று தான் எனவும் அவர் விளக்கம் அளித்தார்.

இரவு சென்னை
இதனிடையே இன்று இரவே தாம் சென்னை திரும்பவிருக்கும் தகவலை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின். பிரதமரை முதல்வர் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க இருப்பது அரசியல் நாகரீகமான செயலாக பார்க்கப்படுகிறது. டி.ஆர்.பாலு எம்.பி., இறையன்பு ஐ.ஏ.எஸ். ஆகியோரும் இந்தச் சந்திப்பில் உடனிருப்பார்கள் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications