UGC Rules: தெற்கிலிருந்து வரும் மாணவர்களை அந்நியமாக பார்ப்பதே பிரச்சனைக்கு காரணம்! உச்ச நீதிமன்றம் கருத்து
டெல்லி: மத்திய அரசின் யுஜிசி வெளியிட்ட புதிய விதிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதை அமல்படுத்த இடைக்காலத் தடை விதித்தார். அத்தோடு யுஜிசி புதிய விதிகள் பிற்போக்குச் சமூகமாக மாறி வருகிறோமா என்ற கேள்விகளை எழுப்புவதாகவும் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும், தெற்கு, வடகிழக்கு மாணவர்கள் ரேக்கிங்கில் பாதிக்கப்படுவது குறித்தும் சில கருத்துகளைத் தெரிவித்தார்.
மத்திய அரசின் யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு செவ்வாய்க்கிழமை புதிய விதிமுறைகளை வெளியிட்டு இருந்தது. யுஜிசியின் முந்தைய 2012 விதிகளை முழுமையாக மாற்றி அமைக்கும் வகையில் இந்த விதிகள் வெளியிடப்பட்டு இருந்தது. ரோஹித் வெமுலா மற்றும் பயல் தட்வி ஆகியோரின் தாய்மார்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த புதிய விதிகள் அறிவிக்கப்பட்டது.

வழக்கு
இருப்பினும், இந்த விதிகள் வெளியானது முதலே இது பெரும் விவாதத்தைக் கிளப்பி இருந்தது. ஒரு தரப்பினர் இந்த விதிகள் மிக சரியாக இருப்பதாகச் சொல்லி வரவேற்பு தெரிவித்தனர். அதேநேரம் மற்றொரு தரப்பினர் இந்த விதிகளைக் கடுமையாக எதிர்த்தனர். குறிப்பாக இந்த விதிகள் பொதுப் பிரிவினருக்கு எதிராக இருப்பதாகச் சொல்லி போராட்டங்களிலும் ஈடுபட்டனர். நேற்று உபி உள்ளிட்ட வட மாநிலங்களில் பரவலாக இது தொடர்பான போராட்டங்கள் நடந்தது.
மேலும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த புதிய விதிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது யுஜிசி புதிய விதிகளை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம், விதிகளை மறுபரிசீலனை செய்யவும் வலியுறுத்தியுள்ளது.
பிற்போக்கு சமூகம்
வழக்கு விசாரணையின்போது யு.ஜி.சியின் இந்த அறிவிப்பு தொடர்பாகத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அவர், "75 ஆண்டுகளுக்குச் சாதியற்ற சமூகமாக மாறுவதற்கு நாம் இத்தை முயற்சிகளை எடுத்துள்ளோம். இப்போது மீண்டும் ஒரு பிற்போக்குச் சமூகமாக மாறி வருகிறோமா?" எனக் கேள்வி எழுப்பினார்.
தெற்கில் இருந்து வரும் மாணவர்கள்
ரேக்கிங் மற்றும் தனி விடுதிகள் அமைக்கப்படுவது தொடர்பான விதிகள் பற்றிக் கூறிய அவர், "தெற்கு அல்லது வடகிழக்கு மாநிலங்களிலிருந்து வரும் மாணவர்கள் தங்கள் கலாச்சாரத்தைக் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு அன்னியமான ஒருவர் அதைப் பற்றி கருத்து தெரிவிப்பது தான் ரேக்கிங்கில் நடக்கும் மோசமான விஷயம்.
உங்கள் விதிகளில் தனித்தனி விடுதிகள் பற்றிப் பேசுகிறீர்கள். அட கடவுளே! நம் சமூகத்தில் இப்போது கலப்புத் திருமணங்களும் நடக்கின்றன. நாங்களும் விடுதிகளில் ஒன்றாகவே தங்கியிருந்தோம். அப்படியிருக்கும்போது இப்போது தனி விடுதிகளைக் கட்டுவது குறித்துப் பேசியுள்ளீர்கள்" என்று காட்டமான கருத்துகளைத் தெரிவித்தார்.
இடைக்காலத் தடை
இந்த விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படலாம் எனக் கூறி, இதை அமல்படுத்த இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரத்தில் தீர்வு எட்டப்படும் வரை 2012 விதிகளே அமலில் இருக்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும் யுஜிசி அமைப்புக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications