அடுத்த அதிரடி.. கைகோர்க்கும் இந்தியா - சீனா.. எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு மீண்டும் சீனா ஒப்புதல்
டெல்லி: கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தியா சீனா இடையேயான எல்லை தாண்டிய வர்த்தகம் நிறுத்தப்பட்டிருந்தது. அண்மையில் இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகள் டெல்லியில் பேச்சுவார்த்தை மேற்கொண்ட நிலையில், இந்தியா-சீனா இடையேயான எல்லை தாண்டிய வா்த்தகத்தை மீண்டும் தொடங்க சீனா ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இருநாடுகளுக்கிடையேயான பரஸ்பர வர்த்தகத்துக்கும், முதலீட்டுக்கும் வழிவகை செய்யும் வகையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா எதிர்ப்பு
ரஷ்யா - உக்ரைன் போரால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக, ரஷ்யா கச்சா எண்ணெய் விற்பனையில் இறங்கியது. சலுகை விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்த காரணத்தால் இந்தியா, சீனா உள்ளிட்ட பல உலக நாடுகள் அதை கொள்முதல் செய்தனர். இதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
வரி உயர்வு
இதைத்தொடர்ந்து, இந்தியா, சீனா பொருட்களுக்கான அமெரிக்க வரியை டிரம்ப் உயர்த்தினார். அதிகபட்சமாக இந்தியா மீதான வரியை அவர் 50 சதவீதம் உயர்த்தியுள்ளார். இதனால், இந்தியா - அமெரிக்கா நெருங்கிய உறவிலும் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், இந்தியா - சீனா இடையே இணக்கமான சூழல் ஏற்பட்டு வருகிறது. இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரிக்கு சீனா எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
சீனா ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு
இதைத்தொடர்ந்து, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களை அழைத்து சீனா ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த மாநாடு தியாஞ்ஜின் நகரில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீனா அதிபர் ஷி ஜின்பிங் கலந்து கொள்ள இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.
இருநாடுகளின் பிரதிநிதிகள் சந்திப்பு
அண்மையில் இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகள் டெல்லியில் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இந்த கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி உடனான பேச்சுவாா்த்தையின் போது கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியா-சீனா இடையேயான எல்லை தாண்டிய வா்த்தகம், ஹிமாசல பிரதேசத்தில் உள்ள ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும் தொடங்க சீனா ஒப்புதல் அளித்துள்ளதாக ஹிமாசல பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா - சீனா வர்த்தகம்
சீனாவுடன் வர்த்தகத்தை மீண்டும் மேற்கொள்வது குறித்து பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஹிமாச்சலப்பிரதேச அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ஹிமாசல பிரதேசத்தின் ஷிப்கி லா, உத்தரகண்டின் லிபுலேக், சிக்கிமின் நாதுலா ஆகிய மூன்று எல்லைப்பகுதிகள் வழியாக வா்த்தகத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஹிமாச்சல் எல்லை
இதுகுறித்து, ஹிமாசலபிரதேச அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: ஹிமாசலப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு ஷிப்கி லா கணவாய் வழியாக சீனாவுக்கு வா்த்தகத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், முதல்வரின் முயற்சிக்குப் பயன் கிடைத்துள்ளது.
சீனா சாதக பதில்
கைலாஷ் மானசரோவா் யாத்திரையையும் ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும் தொடங்குவதற்காக சாதகமான பதிலும் சீனாவிடம் இருந்து கிடைத்துள்ளது.
இதிபெத்தில் உள்ள தாா்சென் மற்றும் மானசரோவா் ஆகிய பகுதிகளுக்குச் செல்வதற்கு, இந்த ஷிப்கி-லா பாதை எளிதாக இருக்கும். இந்த பாதையை மீண்டும் திறப்பதற்கு அனைத்துப் பணிகளும் மத்திய வா்த்தக அமைச்சகத்துடன் இணைந்து செய்யப்பட்டு வருகிறது.
இந்த வா்த்தகப் பாதை மீண்டும் திறக்கப்பட்டால், இந்தியா - சீனா ஆகிய இருநாடுகளுக்கு இடையேயான உறவு மேம்படும். அதேசமயம் எல்லையோர மக்களின் வாழ்வாதாரத்துக்கும் பேருதவியாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications