263 சீனர்களுக்கு சட்டவிரோத விசா- டெல்லி சிபிஐ முன்பு கார்த்தி சிதம்பரம் ஆஜர்- கைது செய்ய கோர்ட் தடை!
டெல்லி: 263 சீன நாட்டவர்களுக்கு சட்டவிரோதமாக விசா பெற்றுத் தர லஞ்சம் வாங்கிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இவ்வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்திருந்தது. அமலாக்கப் பிரிவு கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மூத்த காங்கிரஸ் தலைவரான ப.சிதம்பரம், 2011-ல் மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். அந்த கால கட்டத்தில் பஞ்சாப்பில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றில் பணிபுரிய 263 சீன நாட்டவருக்கு சட்டவிரோதமாக விசா கொடுக்கப்பட்டது.
சல்லி சல்லியா நொறுங்கி.. கார்த்தி சிதம்பரம் பட்ட பாடெல்லாம் வீணாயிடுச்சே..
வேதாந்தா குழுமம்
கார்த்தி சிதம்பரம் தமது செல்வாக்கை பயன்படுத்தி 263 பேருக்கும் சட்டவிரோத விசா பெற்றுக் கொடுத்தார்; இதற்காக ரூ50 லட்சம் லஞ்சமாக பெற்றார் என்பது சிபிஐ வழக்கு. இதேபோல் அமலாக்கப் பிரிவும் கார்த்தி சிதம்பரம் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்ந்தது. பஞ்சாப்பில் வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான டி.எஸ்.பி.எல் நிறுவனத்தில் பணிபுரியும் சீனர்களுக்கான விசா இது. இந்த வேதாந்தா நிறுவனம்தான், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நடத்தியது.
சிக்கிய ஆடிட்டர்
இவ்வழக்கு தொடர்பாக ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைகளின் முடிவில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமன் கைது செய்யபப்ட்டார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கார்த்தி சிதம்பரம் ஆஜர்
இதனிடையே தம் மீதான குற்றச்சாட்டுகளை கார்த்தி சிதம்பரம் திட்டவட்டமாக மறுத்தார். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே தம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் கார்த்தி சிதம்பரம் கூறினார். இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது. இதனடிப்படையில் டெல்லியில் இன்று சிபிஐ அதிகாரிகள் முன்பாக கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராகினார். இவ்வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. டெல்லியில் சிபிஐ முன்பு கார்த்தி சிதம்பரம் ஆஜரான நிலையில் அவர் கைது செய்யப்படுவாரோ என்கிற பரபரப்பும் நிலவியது.
கோர்ட் தடை
இந்நிலையில் அமலாக்கப் பிரிவு தொடர்ந்த சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மே 30-ந் தேதி கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.