போராட்டக்காரர்களை பார்த்தவுடன் சுட்டுத் தள்ளுங்கள்.. மத்திய இணை அமைச்சர் பேச்சு.. பெரும் சர்ச்சை!
போராட்டக்காரர்கள் யாராவது ரயில்வே துறையின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் அவர்களை கண்ட இடத்திலேயே சுட்டுத் தள்ள வேண்டும் என்று மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி தெரிவித்துள்ளார்.
டெல்லி: போராட்டக்காரர்கள் யாராவது ரயில்வே துறையின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் அவர்களை கண்ட இடத்திலேயே சுட்டுத் தள்ள வேண்டும் என்று மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி தெரிவித்துள்ளார்.
கடந்த 7 நாட்களாக நாடு முழுக்க குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. அசாமில் தொடங்கிய போராட்டம் தற்போது நாடு முழுக்க விஸ்வரூபம் எடுத்துள்ளது. டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இந்த தாக்குதலில் மாணவர்கள் பலர் கடுமையாக காயம் அடைந்தனர். இதற்கு எதிராக டெல்லியில் இன்றும் போராட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த போராட்டம் நாடு முழுக்க வேகமாக பரவியது. தற்போது டெல்லி தொடங்கி கேரளா வரை பல மாநிலங்களில் போராட்டம் கடுமையாக நடந்து வருகிறது.
என்ன சொன்னார்
இந்த நிலையில் இந்த மாணவர்கள் போராட்டம் குறித்து மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கருத்து தெரிவித்துள்ளார். அதில், போராட்டக்காரர்கள் எல்லா இடத்திலும் கலவரம் செய்கிறார்கள். இதை அனுமதிக்க முடியாது. அவர்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்துகிறார்கள்.
மிக மோசம்
பொது சொத்துக்களை தாக்கியவர்களை கண்காணித்து வருகிறோம். போராட்டக்காரர்களை கவனமாக கண்காணித்து வருகிறோம். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வழக்குகள் பதியப்படும்.
சுட்டுத் தள்ளுங்கள்
ரயில்வே நிலையங்களில் சிலர் போராட்டம் நடத்துகிறார்கள். இவர்கள் கலவரமும் செய்கிறார்கள். இவர்களை எல்லாம் எங்களால் அனுமதிக்க முடியாது. இப்படி கலவரம் செய்யும் நபர்களை பார்த்தவுடன் சுட வேண்டும். மாநில முதல்வர்கள் இதற்காக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி தெரிவித்துள்ளார்.
|
என்ன சர்ச்சை
அவரின் இந்த கருத்து பெரிய சர்ச்சையாகி உள்ளது. ஏற்கனவே டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாக புகார் உள்ளது. இதை டெல்லி போலீஸ் மறுத்து வரும் நிலையில் தற்போது மத்திய இணை அமைச்சர் ஒருவர் இப்படி கருத்து தெரிவித்துள்ளார்.