விமான டிக்கெட் கட்டணம் குறைக்கப்படுமா? சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பதவியேற்ற அன்றே குட்நியூஸ்
டெல்லி: சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக ராம் மோகன் நாயுடு நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், விமான கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
விமான பயணம் என்பது பலருக்கும் எட்டாத உயரத்தில் இருக்கிறது. சென்னையில் இருந்து கோவை செல்ல வேண்டும் என்றால், சாதாரண நாட்களில் 4 ஆயிரம் ஆகவும், அதிகபட்சமாக 10 ஆயிரம் வரை விமான டிக்கெட் கட்டணம் இருக்கிறது. மதுரை பக்கமும் இதே போன்று கட்டணம் மிக அதிகமாக உள்ளது. டெல்லி, ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா, பெங்களூர் என எந்த நகரத்திற்கு டிக்கெட் கட்டணம் மிக மிக அதிகமாக இருக்கிறது.

கொரோனாவிற்கு முன்பு 2000 ரூபாய்க்கு கோவையில் இருந்து ஹைதரபாத் அல்லது சென்னை, பெங்களூர் என பல்வேறு நகரங்களுக்கு பயணிக்க முடியும். இப்போது அப்படி இல்லை.. கட்டணத்தை பார்த்த பெருமூச்சுவிட வேண்டிய நிலை இருக்கும். உள்நாட்டு பயண விமான டிக்கெட் கட்டணமேஇப்படி என்றால், வெளிநாட்டு பயண டிக்கெட் கட்டணம் மிக மிக அதிகமாக உள்ளது. இந்நிலையில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக ராம் மோகன் நாயுடு நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், விமான கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக வென்று ஆட்சி பொறுப்பில் அமர்ந்துள்ளது. பிரதமர் மோடியின் அமைச்சரவையில் 71 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். மத்திய அமைச்சராக பதவி பிரமாணம் செய்யப்பட்டவர்கள் அடுத்தடுத்து தங்கள் பொறுப்புகளை ஏற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் செல்லும் இடங்களில் எல்லாம் விமான கட்டணம் அதிகமாக இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். கொரோனாவுக்கு பிறகு விமான டிக்கெட் கட்டணம் மிகவும் அதிகரித்து இருப்பதாக கூறுகிறார்கள்.
விமான பயணத்தை அனைவரும் அணுகக்கூடியதாக மாற்றுவதே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் நோக்கம். மலிவு விலையில் கட்டணம் இருந்தால் மட்டுமே அதை அடைய முடியும். தற்போது சாமானியர்களுக்கு சவாலாக விமான கட்டணம் உள்ளது.
விமான டிக்கெட் கட்டணம் தொடர்பாக உள்ள பிரச்சினைகள் பற்றி நான் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். அதற்காக ஆய்வுக்கூட்டங்களை நடத்தப் போகிறேன். இலக்குகளை அடைய 100 நாள் செயல்திட்டம் வகுக்கப்படும். ரயில் பயணத்தைப் போல விமான பயணத்தையும் எளிதாக ஆக்க விரும்புகிறேன். இதில் தீர்வு காண அரசு உறுதி பூண்டுள்ளது" இவ்வாறு சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறினார்.












Click it and Unblock the Notifications