ரூ.400 கோடி வசூல் பண்ணிட்டு நீட் பேப்பரை ரிக்ஷாவில் அனுப்புவீங்களா? சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி!
டெல்லி: மாணவர்களிடம் ரூபாய் 400 கோடி வசூலித்துவிட்டு நீட் வினாத்தாளை ரிக்ஷாவில் அனுப்புவீர்களா? என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 24 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். 14 மாநகரங்களில் உள்ள 571 மையங்களில் நடத்தப்பட்ட நீட் தேர்வை தொடர்ந்து, ஜூன் 4 ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், 67 மாணவர்கள் முதலிடம் பெற்றிருந்தனர். இவர்களில், 10-க்கும் மேற்பட்டோர் முழு மதிப்பெண்களை பெற்றிருந்தனர்.

நீட் ரிசல்ட்டை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கிய விவகாரம், ஆள் மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 38 மனுக்களை விசாரித்து வருகிறது.
இன்றைய விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நரேந்தர் ஹூடா, இளநிலை நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐயின் விசாரணை அறிக்கை மனுதாரர்களுக்கு வழங்கப்படவில்லை என முறையிட்டார்.
இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி சந்திரசூட், இந்த விவகாரம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிபிஐயின் அறிக்கை பகிரப்பட்டால் குற்றம் இழைத்தவர்கள் உஷாராகி விடுவார்கள். நீட் வினாத்தாள் கசிவு திட்டமிட்டு நடந்துள்ளது. ஆனால், அது முழு தேர்வையும் பாதிக்காது என்று கூறும் மனுதாரர்கள் கடைசி வரை அந்த நம்பிக்கையை கைவிடவேண்டாம் எனத் தெரிவித்தார்.
மேலும் நீட் வினாத்தாள் கசிவு திட்டமிட்டு நடந்துள்ளது என்றும், அது முழு தேர்வையும் பாதித்தது என்றும் கூறும் மனுதாரர்கள் அதனை நிரூபிக்க முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, ஆழமான விசாரணை தேவைப்படும் பிரச்சினைகளில் எவை என்பதையும் சுட்டிக்காட்டுங்கள் என்று தெரிவித்தார்.
நீட் தேர்வு எழுதியவர்களில் 1.08 லட்சம் மாணவர்களுக்கு இடங்கள் கிடைக்கும். மீதமுள்ள 22 லட்சம் மாணவர்களுக்கு சீட் கிடைக்காது. எனவே மறு தேர்வுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது. அதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, முழு தேர்வும் அதன் புனிதத்தை இழந்துவிட்டது என்றால் மட்டுமே மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியும் எனத் தெரிவித்தார்.
சில இடங்களில் நீட் வினாத்தாள் உள்ளிட்ட ஆவணங்களை தனியார் கொரியர் நிறுவனங்களின் வாயிலாக ரிக்ஷாக்களில் எந்த விதமான பாதுகாப்பும் இல்லாமல் எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என மாணவர்கள் தரப்பு வழக்கறிஞர் வாதம் முன் வைக்கப்பட்டது. அதற்கு மத்திய அரசு தரப்பில், அவை வினாத்தாள்கள் கிடையாது ஓஎம்ஆர் சீட்டுகள் மட்டுமே என விளக்கம் அளிக்கப்பட்டது
அப்போது குறிப்பிட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், நீட் தேர்வு விவகாரங்களில் தனியார் நிறுவனங்களை பயன்படுத்துகிறீர்களா? என கேள்வி எழுப்பினார். மேலும் எவ்வளவு பணம் வசூலிக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு வழக்கறிஞர், ஒவ்வொரு தேர்வரிடம் இருந்தும் ரூபாய் 1700 என பதில் அளித்தார்.
மேலும், தலைமை நீதிபதி சந்திரசூட், நீட் தேர்வுக்கு மாணவர்களிடம் ரூ. 400 கோடி வசூலித்துவிட்டு, வினாத்தாள்களை ரிக்ஷாவிலா அனுப்புவீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார். அதோடு, வங்கிகளுக்கு அனுப்பி வைக்கும் முன்பே நீட் வினாத்தாள் கசிந்திருக்குமா என கேள்வி எழுப்பினார்.











Click it and Unblock the Notifications