2வது முறையா மசோதா அனுப்பியாச்சு.. இப்போ ஆளுநர் என்ன செய்ய போகிறார்? "வெய்ட்டிங்!" - தலைமை நீதிபதி
டெல்லி: 2ஆவது முறையாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆளுநர் என்ன செய்ய போகிறார் என்பதை காண உச்சநீதிமன்றம் காத்திருப்பதாக தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் என தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் பொறுத்து பார்த்த தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கு மீது கடந்த 10 ஆம் தேதி விசாரணை நடத்தப்பட்டது. அந்த மனுவில் ஆளுநருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை தமிழக அரசு முன் வைத்தது. அப்போது நீதிபதிகள் மசோதாக்களை நிலுவையில் வைத்திருக்கக் கூடாது. 200 ஆவது சட்டப்பிரிவின் கீழ் ஒப்புதல் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் 13 ஆம் தேதியே ஆளுநர் ரவி 10 மசோதாக்களை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியிருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் இன்றைய தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதம் செய்த வழக்கறிஞர் , ஒவ்வொரு முறையும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்திற்கு வந்து கொண்டிருக்க முடியாது. 8 கோடி மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை தங்களுக்கு உள்ளது. 15 மசோதாத்தள் நிலுவையில் உள்ளன.
மசோதாக்களை உரிய விளக்கமின்றி திருப்பி அனுப்பியுள்ளார். சட்டசபை மசோதா தவறு என கருதினாலும் அதை ஆளுநர் கிடப்பில் போட முடியாது என அரசு வழக்கறிஞர் வாதிட்டார். இதை கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில் ஆளுநர்களுக்கு சட்டசபை மசோதாக்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் கிடையாது. குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்க முடியாது.
3 ஆண்டுகளாக மசோதாக்களை நிலுவையில் வைத்து கொண்டு என்ன செய்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி என நீதிபதி கேள்வி எழுப்பிய போது மத்திய அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர், 2020ஆம் ஆண்டு முதல் 180 மசோதாக்களில் 152 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டார் என்றார். இதையடுத்து சந்திரசூட் தொடர்கையில் மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்துக்கு வரும் வரை மாநில ஆளுநர்கள் ஒப்புதல் தராதது ஏன்?
தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 18ஆம் தேதி 2-வது முறையாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன. இப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன செய்யப் போகிறார் என்பதை காண உச்சநீதிமன்றம் காத்திருக்கிறது என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications