தண்டனையை நிறுத்தி வைத்து தீர்ப்பு.. ராகுல் உடனே கொடுத்த ரியாக்ஷன்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க
டெல்லி: அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ராகுல் காந்தி ட்வீட் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது ராகுல் காந்தி, "நிரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களும் ஏன் தங்கள் பெயர்களில் மோடியை வைத்திருக்கிறார்கள்? என்று விமர்சித்து பேசினார்.

ராகுலின் இந்த பேச்சு குறித்து குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில், அம்மாநில பாஜக எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அதில், ராகுல் காந்தியின் பேச்சு, மோடி சமூகத்தையே இழிவுபடுத்திவிட்டதாக கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், கடந்த மார்ச் 23 ஆம் தேதி அன்று தீர்ப்பு அளித்தது. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை கொடுத்தது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, 2 ஆண்டு தண்டனை பெற்றால் எம்எல்ஏ, எம் பி பதவி நீக்கப்படும். அதன்படி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரி சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார். ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கிய செஷன்ஸ் நீதிமன்றம், தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல் முறையீடு செய்தார்.
கடந்த மே மாதம் நடந்த விசாரணையின்போது, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்ஹா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் இன்று ராகுல்காந்திக்கு எதிரான தண்டனை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச 2 ஆண்டு சிறை தண்டனை குறித்த விளக்கம் இல்லை, 2 ஆண்டுகளுக்கு பதிலாக ஒரு நாள் குறைவாக தண்டனை விதித்திருந்தாலும் தகுதி நீக்கம் வந்திருக்காது எனவும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் ராகுல் காந்தி எம்.பி பதவி மீண்டும் கிடைக்க உள்ளது. இது தொடர்பாக மக்களவை செயலகத்தில் இன்றே முறையிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், தனக்கு எதிரான தண்டனைய நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "என்ன நடந்தாலும் கடமை தவற மாட்டேன். இந்தியாவின் நிஜமான தன்மையை காப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications