மகாராஷ்டிரத்தில் சிவசேனா ஆட்சி அமைக்கிறதா?.. பாஜக அல்லாத ஆட்சி அமைக்க வியூகம்!
Recommended Video
டெல்லி: மகாராஷ்டிரத்தில் பாஜக அல்லாத ஆட்சி அமைய சிவசேனாவுக்கு காங்கிரஸ் கட்சியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரத்தில் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
மாநில சட்டசபையில் பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை. இந்த தேர்தலில் எந்தவொரு கட்சியும் தனிபெரும்பான்மை பெறாததால் கூட்டணி ஆட்சி அமைக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதில் தேர்தலுக்கு முன்பு பாஜகவுடன் சிவசேனா கூட்டணி அமைத்துவிட்டது.

முதல்வர் பதவி
இவை இரண்டும் சேர்ந்து 161 இடங்களை பெற்றுள்ளதால் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைவிட அதிகம் உள்ளதால் ஆட்சி அமைக்கலாம். ஆனால் சிவசேனாவோ தேர்தல் முடிவுகள் வெளிவந்த நாள் முதல் முதல்வர் பதவியில் பங்கு கேட்டு வருகிறது.

வாக்குறுதிகள்
அதாவது இரண்டரை ஆண்டுகள் பாஜகவும் மீதமுள்ள இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவும் ஆட்சி அமைக்க வேண்டும் என கோருகிறது. ஆனால் பாஜகவோ இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. சிவசேனாவிடம் தாங்கள் அத்தகைய வாக்குறுதிகளை ஏதும் கொடுக்கவில்லை என பாஜக கூறுகிறது.

பாஜக ஆதரவு
மேலும் 5 ஆண்டுகளுக்கும் நானே முதல்வர் என தேவேந்திர பட்னவீஸ் கூறி வருகிறார். நவம்பர் 7-ஆம் தேதிக்குள் ஆட்சி அமைக்காவிட்டால் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி வந்துவிடும் என பாஜக கூறுகிறது. காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சித்து வருகிறது.

மூத்த தலைவர்கள்
அது போல் கர்நாடகத்தில் பாஜகவை ஆட்சி வரவிடாமல் தடுத்தது போல் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ஒப்புதல் பெற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்தித்து பேசினர்.

பாஜகவை ஆதரிக்க மாட்டோம்
இதனிடையே தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில் எந்தவொரு கட்சியும் எனக்கு தீண்டதகாதவை அல்ல. பாஜக ஆளுநர் ஆட்சியை பற்றி பேசுகிறது. ஆனால் அதற்காக தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை. நாங்கள் ஒரு போதும் பாஜகவை ஆதரிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு ஆதரவு இல்லை
எனவே சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு கொடுப்பது குறித்து ஆலோசனை செய்ய சோனியா காந்தியை என்சிபியின் சரத் பவார் சந்தித்து பேசுவார் என உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றனர். பாஜகவுக்கு என்சிபியும் காங்கிரஸும் ஆதரவளிக்காத நிலையில் சிவசேனா ஆட்சி அமைக்கும் என தெரிகிறது.

கர்நாடக அரசியல்
அதே நேரத்தில் பாஜக ஆட்சியை விட்டு கொடுக்காமல் சிவசேனாவுக்கு முக்கிய அமைச்சர் பதவிகள் கொடுக்க பேரம் பேசப்படலாம் என்றும் தெரிகிறது. கர்நாடகத்தில் மஜதவுக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துவிட்டு பின்னர் காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்களின் அதிகார போட்டியால் அங்கு ஆட்சி கவிழ்ந்ததையும் சிவசேனா நினைவில் கொண்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறியுள்ளன.












Click it and Unblock the Notifications