குஜராத், ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் மும்முனைப் போட்டி- மேலிட பார்வையாளர்களை நியமித்தது காங்.!
டெல்லி: குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்களுக்கான மேலிடப் பார்வையாளர்களை காங்கிரஸ் நியமித்துள்ளது.
குஜராத், ஹிமாச்சல பிரதேச சட்டசபைகளுக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இருக்கிறது. இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸும் செல்வாக்குடன் இருக்கிறது. அதேநேரத்தில் மும்முனைப் போட்டியை உருவாக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சியும் களமிறங்க உள்ளது.

குஜராத் மாநிலத்தில் 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 77 இடங்களில் வென்றது. 99 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியை தக்க வைத்தது. ஹிமாச்சல பிரதேசத்தில் 2017 தேர்தலில் பாஜக 44; காங்கிரஸ் 21 இடங்களில் வென்றது.
அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைத் தழுவியது. பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி அதிகார்த்தை ஆம் ஆத்மியிடம் பறிகொடுத்தது காங்கிரஸ். இதனையடுத்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் குஜராத், ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் இப்போதே கவனம் செலுத்த தொடங்கிவிட்டது. இதன் முதல் கட்டமாக இரு மாநிலங்களுக்கும் மூத்த தலைவர்கள் தலைமையில் மேலிடப் பார்வையாளர்களை களமிறக்கி இருக்கிறது காங்கிரஸ்.
குஜராத் மாநில மேலிடப் பார்வையாளராக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் மிலிந்த தியாரோ, சிங் தியோ ஆகியோரும் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
ஹிமாச்சல பிரதேச மேலிடப் பார்வையாளராக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் சிங் பாகெல் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருடன் சச்சின் பைல்ட், பர்தாப்சிங் பஜ்வா, பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. அண்மையில் குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியில் ஜிக்னேஷ் மேவானி உட்பட 7 செயல் தலைவர்கள் நியமிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications