தகிக்கும் தலைநகர்.. சோனியா வீடு முன் காக்கிகள்! கொதித்தெழுந்த காங்கிரஸ் - எம்பிக்களுக்கு அழைப்பு
டெல்லி: நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை சீல் வைத்து சோனியா காந்தி வீடு முன் போலீசார் குவிக்கப்பட்டு உள்ள நிலையில் எம்பிக்கள் கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
நாட்டின் விடுதலைக்கு முன்னர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனம். இந்நிறுவனத்தின் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பத்திரிகை இழப்பை சந்தித்ததால் காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் வழங்கியது.
இருப்பினும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மூடப்பட்டு 2010 ஆம் ஆண்டு அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் யங் இந்தியா என்ற நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன. இந்நிறுவனத்தின் 76% பங்குகள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி வசம் உள்ளன. இந்த நிலையில் பாஜக எம்.பி. சுப்பிரமணியசுவாமி பங்கு பரிமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி வழக்கு தொடர்ந்தார்.

அமலாக்கத்துறை வழக்கு
இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அந்நிய செலாவணி மோசடி நடந்துள்ளதாக கூறி அமலாக்கத்துறையும் வழக்கு தொடர்ந்தது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு நிதி வழங்கியது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

ராகுல் காந்தியிடம் விசாரணை
இந்த நிலையில் சோனியா காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராகுல் காந்தி மட்டும் கடந்த ஜூன் மாதம் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் பல கட்ட விசாரணைகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் அப்போது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சோனியா காந்தியிடம் விசாரணை
கொரோனா பாதிப்பில் இருந்து சோனியா காந்தி மீண்டதை தொடர்ந்து அவர் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதனை தொடர்ந்து கடந்த ஜுலை 21 ஆம் தேதி மற்றும் கடந்த 26 ஆம் தேதி சோனியா காந்தி விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அமலாக்கத்துறையையும் மத்திய அரசையும் கண்டித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி எம்பி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சீல் வைப்பு
இந்த நிலையில் இன்று மாலை நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். அத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அவர்கள் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். மேலும் சோனியா காந்தியின் வீடு முன்பாக ஏராளமாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

எம்பிக்களுக்கு அழைப்பு
இந்த நிலையில் நாளை காலை காங்கிரஸ் கட்சியின் லோக்சபா மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. நாளை காலை 9:45 மணியளவில் காங்கிரஸ் நாடாளுமன்ற அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் என்றும், இதில் கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications