தமிழக அரசை சாடிய நிர்மலா.. திமுகவுக்கு ஆதரவாக நின்ற கார்கே.. நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தொடர்பாக விவாதம் நடந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசை விமர்சிக்கும் வகையில் நிர்மலா சீதாதாரமன் சில கருத்துகளைக் கூறியிருந்தார். எடப்பாடி பேச்சை மேற்கோள்காட்டி நிர்மலா சீதாராமன் பேசிய நிலையில், அவரது பேச்சுக்குக் காங்கிரஸ் தலைவர் கார்கே கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது.
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து இப்போது மத்திய பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடந்து வருகிறது.

இதற்கிடையே இன்று ராஜ்யசபாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்- கார்கே இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. தமிழ்நாட்டின கடன் சுமை தொடர்பாக எடப்பாடி பேச்சை மேற்கோள்காட்டி நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார். தமிழ்நாட்டின் கடன் சுமையை திமுக அரசு அதிகரித்துவிட்டதாகவும் கடன் வரம்பு குறித்தும் நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார்.
இருப்பினும், நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடும் கண்டனம் தெரிவித்தார். தமிழகத்தில் தேர்தல் வர இருப்பதால் எடப்பாடி பழனிசாமியை நிர்மலா மேற்கோள் காட்டுகிறார் என்று சொன்ன கார்கே, நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதம் மத்திய பட்ஜெட் பற்றியா இல்லை தமிழக பட்ஜெட் பற்றியா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தேர்தலை மனதில் வைத்துத் திட்டமிட்டு நிதியமைச்சர் இதைப் பேசுகிறார் என்றும் எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கும் நாடாளுமன்ற விவாதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications