கூடுதலா ஒரு கேள்வி போதும்.. சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தணும்! காங்கிரஸ் வலியுறுத்தல்
டெல்லி: மத்திய அரசு விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளைத் தொடங்க உள்ள நிலையில், அதைச் சாதி வாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. வெறும் ஒரே ஒரு கேள்வியை இணைப்பதன் மூலம் ஓபிசி பிரிவினரின் சாதி வாரியான மக்கள்தொகையைத் தெரிந்து கொள்ள முடியும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
உலகின் மிகப் பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. இங்கே நமது நாட்டில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு: நமது நாட்டில் கடைசியாக 2011இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அடுத்து 2021இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை நடத்தி இருக்க வேண்டும். இருப்பினும், பல காரணங்களால் அது நடக்கவில்லை. ஏற்கனவே இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதமாகி உள்ள நிலையில், பலரும் இதை உடனடியாக நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் இது தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று சமீபத்தில் வெளியானது. அதாவது கடந்த 2021இல் எடுக்கப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை, செப். மாதம் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்த 18 மாதங்களில் நாடு முழுக்க இந்த கணக்கெடுப்பை முடித்து 2026இல் இதன் முடிவுகளை வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் வலியுறுத்தல்: இதற்கிடையே மக்கள்தொகை கணக்கெடுப்பைச் சாதி வாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்படாத நிலையில், அதைக் குறிப்பிட்டு மோடி அரசைக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் கூடுதலாக ஒரு கேள்வியைச் சேர்ப்பதன் மூலம் ஓபிசி மக்கள்தொகையின் ஜாதி வாரியான தரவை அரசு சேகரிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு இந்த தகவல்கள் மேலும் ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரே ஒரு கேள்வி: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "1951ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பிலும் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் குறித்த தரவுகள் ஜாதி வாரியாக சேகரிக்கப்படுகிறது. அடுத்து நடக்கும் மக்கள் தொகை சர்வேயில் எந்தவொரு சிரமும் இல்லாமல் வெறும் ஒரு கேள்வியைக் கூடுதலாகச் சேர்ப்பதன் மூலம் ஓபிசி மக்கள்தொகையின் சாதி வாரியான தரவுகளையும் சேகரிக்க முடியும்" என்று பதிவிட்டுள்ளார்.
மக்கள் நீண்ட காலமாக ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அந்த கோரிக்கையை இது நிறைவேற்றும் என்று அவர் தெரிவித்தார். நமது நாட்டில் கடைசியாக 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 2021இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும். இருப்பினும், கொரோனா உள்ளிட்ட காரணங்களால் அவை தாமதமானது. இந்தச் சூழலில் தான் செப். மாதம் இதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications