Year Ender 20221: காங்கிரஸில்தான் எத்தனை எத்தனை குழப்பம், பஞ்சாயத்து, தேர்தல் தோல்விகள்.. அப்பப்பா!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் 2021-ம் ஆண்டு வரலாறு மறக்க முடியாத சோகங்கள் நிறைந்தது.. தேர்தல் தோல்விகள், உட்கட்சி குழப்பங்கள் என திரும்பிய திசையெங்கும் அக்கப்போர்களால் அல்லோகலப்பட்டுப் போனது காங்கிரஸ்.
2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எம்.பி.யாக தேர்ந்தெடுத்த கேரளா மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், கேரளாவில் பரம எதிரியான இடதுசாரிகளுன் கூட்டணி அமைத்தது காங்கிரஸ். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காமல் போனது. தேசிய அளவில் காங்கிரஸுடன் லேசுபாசாக நட்புறவில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் முதன்மை எதிரியாக உருமாறியது.

எதிரியான திரிணாமுல் காங்கிரஸ்
ஹரியானா, அஸ்ஸாம், கோவா உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரஸ் மூத்த தலைவர்களை கபளீகரம் செய்தது திரிணாமுல் காங்கிரஸ். 2024 லோக்சபா தேர்தலை முன்வைத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணிக்கு முயற்சித்து கொண்டிருக்கிறார். இதுவும் காங்கிரஸை ஆத்திரம் கொள்ள வைத்திருக்கிறது.

5 மாநில தேர்தல்கள்
பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் 2022-ல் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றன. இந்த 5 மாநிலங்களில் பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவாவில் காங்கிரஸ் செல்வாக்கு உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களின் போக்குகளால் இந்த 5 மாநிலங்களில் காங்கிரஸ் போணியாக வாய்ப்பே இல்லை என முகத்தில் அறைந்தாற்போல சொல்லுகின்றன கருத்து கணிப்புகள்.

பஞ்சராக்கிவிட்ட பஞ்சாப்
2021-ம் ஆண்டில் காங்கிரஸ் அதிகபட்சமாக உட்கட்சி மோதலை பஞ்சாப் மாநிலத்தில்தான் எதிர்கொண்டது. பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் முதல்வராக இருந்த அமரீந்தர்சிங்குக்கும் இடையேயான மோதல் தலைப்புச் செய்திகளாகின. இதனால் அமரீந்தர்சிங் முதல்வர் பதவியை விட்டு விலகினார். அத்துடன் காங்கிரஸ் கட்சிக்கே முழுக்குப் போட்டுவிட்டு பஞ்சாப் லோக் காங்கிரஸை தொடங்கினார். அதேவேகத்துடன் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். இந்த பஞ்சாயத்துகளால் பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்துவிடும் என்கின்றன கருத்து கணிப்புகள்.

திடுமென கலகக் குரல்
இந்த ஆண்டின் கடைசியாக உத்தரகாண்ட் மாநிலத்தில் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான் ஹரீஷ் ராவத் கலகக் குரல் எழுப்பி வருகிறார். உத்தரகாண்ட் மாநிலமும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. முதல்வர் வேட்பாளராக தம்மையே முன்னிறுத்த ஹரீஷ் ராவத் மேற்கொண்டு வரும் இந்த குட்டையை குழப்புகிற நடவடிக்கைகள் காங்கிரஸ் மேலிடத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எவ்வளவுதான் அடி தாங்கிறதாம்?












Click it and Unblock the Notifications