திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்?
டெல்லி: தேசிய அரசியலில் பாஜகவை வீழ்த்த 'இந்தியா' கூட்டணி என்ற மெகா கூட்டணியை காங்கிரஸ் ஒருங்கிணைத்தது. ஆனால் கூட்டணிக்குள் இருக்கும் மாநிலக் கட்சிகளிடம் காங்கிரஸ் நடந்துகொள்ளும் விதம் தற்போதைய சூழலில் பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. டெல்லியில் இன்று திருமாவளவன் எழுப்பிய குரல் காங்கிரஸ் மேலிடத்தைக் கலங்கடித்துள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை குறித்து இன்று நடந்த 'இந்தியா' கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் வெளிப்படையாகத் தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார். இது ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் மேலிடத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

டெல்லியில் கூட்டம்
டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டணி அமைய முக்கிய பங்காற்றிய திமுக இல்லாமல் முதல் முறையாக கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் திருமாவளவன் காங்கிரஸ் மீது கடுமையாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். நடந்து முடிந்த மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் எதிர்க்கட்சி கூட்டணிகளில் வலிமையாக இருந்த திரிணாமூல், இடதுசாரிகள், திமுகவின் வெற்றியை பாதித்துள்ளதாகவும் இதனால் கூட்டணி கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பாட்டுள்ளதாகவும் திருமாவளவன் குற்றச்சாட்டு வைத்தார்.
திருமாவளவன் குற்றசாட்டு
கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் காங்கிரஸ் மேற்கொண்ட அணுகுமுறையால் திரிணாமுல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக ஆகிய கட்சிகளை பலவீனம் அடையச் செய்ததாகவும் காங்கிரஸின் செயல் விரும்பத்தக்கது அல்ல என்றும் காங்கிரஸ் கட்சி தனது அணுகுமுறையை மறுஆய்வு செய்து ஒற்றுமையை வலுவாக முன்னெடுக்க வேண்டும் என்றும் திருமாளவன் வலியுறுத்தியுள்ளார்.
பாஜகவுக்கு எதிராக ஒரு தேசியக் கூட்டணியை வழிநடத்த வேண்டிய காங்கிரஸ், தங்களின் சுயநலத் தேர்தல் லாபங்களை மட்டுமே முன்னிறுத்துவதாகத் திருமாவளவன் மிகக் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆடிப்போன டெல்லி
சமூக நீதி மற்றும் தலித் அரசியலின் முகமாக இருக்கும் திருமாவளவன் போன்ற ஒரு தலைவர், தேசிய அளவில் காங்கிரஸின் அணுகுமுறையை விமர்சிப்பது ராகுல் காந்தியின் 'அனைவரையும் உள்ளடக்கிய' அரசியல் பிம்பத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
பிராந்தியக் கட்சிகள் ஒவ்வொன்றாக காங்கிரஸின் 'பெரிய அண்ணன்' மனப்பான்மையால் கூட்டணியை விட்டுத் தள்ளிப் போகத் தொடங்கினால், 'இந்தியா' கூட்டணி என்பது வெறும் பேப்பர் கூட்டணியாக மாறிவிடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது?
திருமாவளவனின் இந்தத் துணிச்சலான விமர்சனத்திற்கு செவிகொடுத்தே ஆகவேண்டிய சூழலுக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது. அடுத்து வரும் முக்கிய மாநிலத் தேர்தல்களுக்கு முன்பாக இந்தக் கூட்டணியைக் காப்பாற்ற காங்கிரஸ் சில அதிரடி சமாதானப் படலங்களை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
தமிழகத்தில் தவெக - காங்கிரஸ் இடையே புதிய அரசியல் சமன்பாடுகள் உருவாகியுள்ள வேளையில், திருமாவளவனின் இந்த குரல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. காங்கிரஸ் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாவிட்டால், தேசிய அளவில் 'இந்தியா' கூட்டணி சிதறுவதைத் தடுக்க முடியாது என்ற கசப்பான உண்மையை விசிக தலைவர் திருமாவளவன் உரக்கச் சொல்லியிருக்கிறார். இனி காங்கிரஸ் 'பெரிய அண்ணன்' வேடத்தைக் கலைத்துவிட்டு, தோழமையோடு கரம் கோர்க்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications